அன்புமணி மைத்துனர் டாக்டர் விஷ்ணு பிரசாத் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம்: இளங்கோவன் அதிரடி!
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மகன் டாக்டர் அன்புமணியின் மைத்துனரும், சட்டசபை முன்னாள் உறுப்பினருமான டாக்டர் விஷ்ணு பிரசாத்தை காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கி அக்கட்சியின் தமிழக தலைவர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாசின் சம்பந்தி முன்னாள் காங்கிரஸ் எம்.பி கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் விஷ்ணு பிரசாத், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர். சட்டசபை முன்னாள் உறுப்பினர். நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் செய்யாறு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவர். இவரது தாத்தா விநாயகம், தமிழகசட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவராவார்.
இந்நிலையில், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. விஷ்ணு பிரசாத் கட்சியில் இருந்த நீக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தல் குறித்து வாரத இதழுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் எம்.கிருஷ்ணசாமியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸின் மைத்துனரும், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான டாக்டர் எம்.கே.விஷ்ணு பிரசாத், காங்கிரஸ் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கிற வகையில் கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்த பேட்டியின் மூலம் தமிழக காங்கிரஸின் தேர்தல் அணுகுமுறைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவதூறுகளை பரப்புகிற நோக்கத்தில் வெளிப்படையாக கருத்துகள் கூறியிருப்பதை கட்சி விரோத நடவடிக்கையாக கருதுகிறோம்.
எனவே, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் டாக்டர் எம்.கே.விஷ்ணு பிரசாத், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுகிறார். இவரோடு காங்கிரஸ் கட்சியினர் எவரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றார் இளங்கோவன்.