தமிழக ஹஜ் பயணிகளை தேர்வு செய்ய 21ம் தேதி சென்னையில் குலுக்கல்
சென்னை: புனித ஹஜ் பயணம் சென்று வர தமிழகத்தில் விண்ணப்பித்தவர்களை தேர்வு செய்ய வரும் 21ம் தேதி சென்னையில் குலுக்கல் நடைபெறுகிறது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
ஹஜ் 2014-ற்காக சுமார் 13,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் புனிதப் பயணிகளிடமிருந்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவால் பெறப்பட்டுள்ளன. எனவே, புனிதப் பயணிகளை குலுக்கல் முறை மூலம் தேர்வு செய்யுமாறு மும்பை, இந்திய ஹஜ் குழு, மாநில ஹஜ் குழுவை கேட்டுக் கொண்டுள்ளது.
மும்பை, இந்திய ஹஜ் குழு கேட்டுக் கொண்டபடி ஹஜ் 2014-ற்கான புனிதப் பயணிகளைத் தேர்வு செய்ய குலுக்கலை நடத்த தமிழ் நாடு மாநில ஹஜ் குழு முடிவு செய்துள்ளது. இந்தக் குலுக்கல் நிகழ்ச்சி 21.4.2014 அன்று காலை 11.30 மணியளவில் சென்னை, ராயப்பேட்டை, புதுக்கல்லூரியிலுள்ள, ஆனைக்கார் அப்துல் சுக்கூர் அரங்கத்தில் நடைபெறும்.
ஹஜ் 2014-ற்காக, தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலமாக விண்ணப்பித்துள்ள புனிதப் பயணிகள் இக்குலுக்கலில் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை அமைதியாகவும், வெற்றிகரமாகவும் நடத்திட ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications