எழுந்ததும் குடிக்கனும்... கெட்டுக் குட்டிச்சுவராகும் சென்னைவாசிகள்!
சென்னை: காலையில் எழுந்ததுமே மதுவின் முகத்தில் விழிப்பதை வழக்கமாக்கி வருகிறார்களாம் சென்னையில் பலர். காலை எழுந்ததுமே மதுவைத் தேடி ஓடும் அவர்களைப் பார்த்து குடும்பத்தினர் வேதனைப்படும் அவலம் அதிகரித்து வருகிறறது.
டாஸ்மாக் கடைதான் காலை 10 மணிக்குத்தானே திறக்கும். பிறகெப்படி இவர்களுக்கு அதற்கு முன்பாக மது கிடைக்கும் என்ற கேள்வி எழலாம். இப்படிப்பட்ட கொடூரக் குடிகாரர்களுக்காகவே இருக்கவே இருக்கிறது பிளாக் மார்க்கெட். மதுக் கடைகளுக்கு அருகில் உள்ள பார்களிலேயே பிளாக்கில், கூடுதல் விலையில் மது விற்பனை நடக்கிறது. அதைத்தான் வாங்கி வாயில் ஊற்றிக் கொள்கிறார்களாம் இந்தக் குடிகாரர்கள்.

இப்படிப்பட்ட குடிகாரர்களால் வீடுகளில் தினந்தோறும் பிரச்சினைதான். தினசரி காலையில் எழுந்ததும் குடிக்க ஓடுவது, பணம் கேட்டு சண்டை போடுவது என்று நிம்மதியிழந்த வாழ்க்கையாக மாறியுள்ளது இப்படிப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு.
பல குடிகாரர்களுக்கு குடிப்பதே முக்கியத் தொழிலாக மாறியுள்ளது. எப்போது பார்த்தாலும் குடிக்கும் அளவுக்கு அடிமையாகிப் போய்க் கிடக்கிறார்களாம். காலையில் குடிப்பது, பின்னர் மாலையில் குடிப்பது, இரவில் குடித்து விட்டு அதே போதையில் வந்து தூங்குவது என்று என்னேரமும் மது வாடையுடன் இவர்கள் அலைகிறார்கள்.
இப்போது சென்னையில் காலையில் எழுந்ததும் கட்டிங் விடும் குடிகாரர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாம். தூங்கி எழுந்ததுமே கட்டிங் விட்டால்தான் இவர்களுக்கு அன்றைய நாள் நல்லபடியாக தொடங்குமாம்.
இவர்களுக்காகவே மது பார்களில் பிளாக்கில் மது விற்கிறார்களாம். கடையில் விற்கும் மதுவை விட கூடுதல் விலைக்கு இவர்கள் விற்று நல்ல காசு பார்க்கிறார்களாம்.
பலர் முதல் நாளே மது வாங்கி வைத்துக் கொண்டு வீட்டிலேயே எழுந்ததும் குடித்து விட்டு பிறகுதான் பல்லே விளக்கப் போகிறார்களாம்.
மதுக் கொடுமையின் கொடூர முகம் தமிழக மக்களின் வாழ்க்கையை படு வேகமாக சாம்பலாக்கி வருகிறது என்பது நிதர்சனமான உண்மை.












Click it and Unblock the Notifications