சென்னையில் குடிநீர் வாரிய லாரிகள் நடத்திய ஸ்டிரைக் வாபஸ்! தண்ணீர் தட்டுப்பாடு அபாயம் நீங்கியது
சென்னை: காவல்துறை கெடுபிடியை எதிர்த்து குடிநீர் வாரிய ஒப்பந்த லாரி ஓட்டுநர்கள் இன்று காலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு மதியம் 12 மணிக்கு பிறகு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதனால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நீங்கியது.
குடிநீர் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள லாரிகள் சென்னையில் குடிநீர் சப்ளை செய்து வருகின்றன. இந்த லாரிகள் மிக வேகமாக செல்வதாகவும், வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள குடிநீர் வாரிய அலுவலகம் முன்பு லாரிகள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகவும் புகார்கள் உண்டு.
காவல்துறை இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தொடங்கிய நிலையில், காவல்துறையின் இடையூறை கண்டித்து குடிநீர் லாரி ஓட்டுநர்கள் இன்று காலை 6 மணி முதல் தண்ணீர் நிரப்பாமல் போராட்டத்தில் குதித்தனர்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் சென்னையில் இன்று குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும், கடைகளில் விற்பனையாகும் பாட்டில் தண்ணீரை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
இருப்பினும் குளிப்பது போன்ற பிற தண்ணீர் தேவைகளை நிறைவேற்றுவது எப்படி என்ற கலக்கத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் இருந்தனர். இந்த நிலையில், ஓட்டுநர்களுடன் அரசு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மதியம் 12 மணியளவில் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஓட்டுநர்கள் அறிவித்தனர்.
குடிநீர் பிடிக்கும் மையத்தின் அருகே லாரிகளை நிறுத்திக்கொள்ள அனுமதிக்கப்படும் என்ற உறுதிமொழியை தொடர்ந்து இப்போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.