பயணிகளை மறித்த போக்குவரத்து அதிகாரி.. வேனில் ஏற்றிக் கடத்திய டிரைவர் !
நாகர்கோவில்: வேனில் பயணிகளை ஏற்றப்படுவதை தடுத்த போக்குவரத்துத் துறை அதிகாரியை வேனில் தூக்கி போட்டு கடத்திய சம்பவம் அங்கு அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்ட மேற்கு பகுதியில் அரசு பஸ்சுக்கு போட்டியாக தனியார் வேன்கள் பயணிகளை போட்டி போட்டு ஏற்றி செல்வதாக குற்றச்சாட்டு உள்ளது. இதனை கட்டுபடுத்த போக்குவரத்து கழக அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை ஒரு வேன் பயணிகளை ஏற்றி கொண்டு இருந்தது. அப்போது அந்த வழியாக வந்த குழித்துறை பணிமனை மேலாளர் சுந்தர்சிங் வேனில் இருந்த பயணிகளை இறக்கி விட்டு அவர் அமர்ந்து கொண்டார். பின்னர் டிரைவரிடம் வேனை களியாக்காவிளை காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லுமாறு கூறினார். அவருடன் வந்த போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றொரு காரில் வேனை பின் தொடர்ந்தனர். ஆனால் அந்த வேன் களியாக்கவிளை காவல் நிலையம் செல்லாமல் வேறு வழியில் சென்றது.
இதை பார்த்து அதிர்ந்த பின்னால் வந்த பிற அதிகாரிகள் வேனை துரத்தி சென்றனர். வேன் தடம் மாறி செல்வதை அறிந்த அதிகாரி, தனது மேல் அதிகாரிகளுக்கும், காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தார். அப்போது வேன் நகர எல்லையை தாண்டி விட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே போனில் அதிகாரி பேசுவதை கேட்டு உஷாராகி வேனை ரோட்டின் ஓரத்தில் நிறுத்தி தப்பி ஓடி விட்டார். அதற்குள் சம்பவ இடத்துக்கு வந்த புதுக்கடை மற்றும் களியாக்கவிளை போலீசார் கிளை மேலாளரிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டனர். வேனை பறிமுதல் செய்தனர்.
சுந்தர்சிங் கொடுத்த புகாரின் பேரில் களியாக்கவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications