பயிர்கள் கருகி நாசம்.. அதிர்ச்சியில் மாரடைப்பு… நாகையில் மேலும் ஒரு விவசாயி மரணம்
விவசாயம் பொய்த்துப் போனதால் விவசாயிகளின் மரணம் அதிகரித்து வருகிறது. இன்று காலை நாகை மாவட்ட விவசாயி ஒருவர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.
நாகை: நாகை மாவட்டத்தில் இன்று காலை ஒரு விவசாயி மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். பயிர்கள் கருகியதால் நாகை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 33 பேர் மரணமடைந்துள்ளனர். இந்த இரண்டு நாட்களில் மட்டும் 11 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
காவிரி டெல்டா பகுதிகளில் காவிரியில் இருந்து நீர் கிடைக்காமலும், இயற்கையாக பெய்யும் வடகிழக்குப் பருவமழை சரியாக பெய்யவில்லை என்பதாலும் விவசாயிகள் தொடர்ந்து மரணம் அடைந்து வருகின்றனர். விவசாயம் பொய்த்துப் போனால் விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகிவிட்டது. பயிர்கள் காய்ந்த அதிர்ச்சியில் மாரடைப்பிலும் பல விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை நாகையில் உள்ள மேலகாவலக்குடி என்ற கிராமத்தில் விவசாயி ஒருவர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். விவசாயி தம்புசாமி, இன்று காலை தான் பயிரிட்ட நிலத்திற்கு வழக்கம் போல் சென்றுள்ளார். அங்கு பயிர்கள் நீரின்றி வாடிக்கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சுருண்டு விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். இதனால் அந்தப் பகுதி விவசாயிகள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விவசாயம் பொய்த்துப் போனதால் நாகை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த இரண்டு நாட்களில் மட்டும் 11 பேர் நாகை மாவட்டத்தில் இறந்துள்ளனர். தற்கொலை செய்து கொண்டது, அதிர்ச்சியால் மாரடைப்பு ஏற்பட்டது என 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் மரணம் அடைந்துள்ளனர்.