குடித்து விட்டு கெட்ட கெட்ட வார்த்தையில் பேசிய நபரை தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற இருவர்
ஈரோடு: குடித்து விட்டு கெட்ட கெட்ட வார்த்தையில் பேசிய நபரை, அங்கிருந்த இரண்டு பேர் கோபத்தில் கல்லை எடுத்து தலையில் போட்டுக் கொன்று விட்டுப் போய் விட்டனர். தற்போது செத்தவர் யார் என்பது தெரியாமல் போலீஸார் குழம்பி நிற்கின்றனராம்.
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே உள்ள பிரகாசம் வீதியில் செயல்பட்டுவரும் டாஸ்மாக் கடைமுன், கடந்த 24-ம் தேதி காலை, 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
அவரது உடலைப் போலீஸார் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர். இந்த விவகாரத்தில், கொலை செய்ததாக பாலு என்ற பாலமுருகன், அலாவுதீன் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர்.
குடிக்க வந்த இடத்தில் நட்பு
ஆனால் இறந்தது யார் என்பது கொலை செய்த இருவருக்கும் தெரியவில்லை. என்னதான் நடந்தது என்று அவர்களிடம் போலீஸார் கேட்டதற்கு, 23-ம் தேதி மாலை, டாஸ்மாக் கடைக்கு, பாலுவும், அலாவுதீனும் மது குடிக்க வந்துள்ளனர். அப்போது கொலையான நபரும் வந்து குடித்துள்ளார். குடித்தவர், இந்த இருவரையும் அணுகி எனக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது. தீர்த்து வைப்பீர்களா என்று கேட்டு தனது மதுவையும் அவர்களுடன் ஷேர் செய்தார். குடிக்க வந்த இடத்தில் மூன்று பேரும் சரளமாக பேசிக் கொண்டனர்.
நல்ல வக்கீலா வேணும்
பின்னர் தனக்கு ஒரு வக்கீல் தேவை என்று கொலையான நபர் கேட்டுள்ளார். பார்க்கலாமே, வாங்க, நமக்குத் தெரிந்த நல்ல வக்கீல் இருக்கிறார் என்று ஒரு வக்கீல் வீட்டுக்கு அவரை இருவரும் கூட்டிப் போயுள்ளனர்.
போய்ட்டு காலையில வாங்கய்யா...
மூன்று பேரும் வந்த கோலம், நின்ற கோலம், ஆடிய ஆட்டம் ஆகியவற்றைப் பார்த்த வக்கீல் கடுப்பாகி, போய்ட்டு காலையில் வாங்கப்பா பார்க்கலாம் என்று வீட்டுக்குள் போய் விட்டார்.
இதனால் கடுப்பாகிப் போன கொலையான நபர், பாலுவையும், வக்கீலையும் சரமாரியாக கெட்ட கெட்ட வார்த்தையால் திட்டியுள்ளார். பின்னர் வக்கீல் வீட்டுத் திண்ணையிலேயே படுத்து விட்டார்.
கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டி..
படுத்தும் கோபம் குறையாமல் பாலுவையும், அலாவுதீனையும் அவர் அசிங்கமாக பேசியபடி இருந்ததால் அவர்கள் இருவரும் கோபமடைந்து, கீழே கிடந்த கல்லைத் தூக்கி தலையில் போட்டுக் கொன்று விட்டனர். பின்னர் போய் விட்டனர்.
இப்போது செத்துப் போன நபர் யார் என்ற விவரத்தை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications