குடிகாரர்கள் பிணங்களுக்குச் சமம்... குமரி அனந்தன் வேதனைப் பேச்சு

இதுதொடர்பாக குமரியார் வெளியிட்டுள்ள அறிக்கை:
‘குடித்தவனை நான் உயிரோடுள்ள மனிதனில் ஒருவனாக எண்ணமாட்டேன். அவனை செத்தாருள் ஒருவனாக கருதுவேன்' எனக் கூறிய வள்ளுவர் பிறந்த தமிழ்நாட்டில், உலகில் முதன் முதலாக காந்தியை மகாத்மா என்று அழைத்த தமிழ்நாட்டில், சென்ற ஆண்டின் கடைசி நாளிலும், இந்த ஆண்டின் முதல் நாளாகிய புத்தாண்டிலும் காந்தி படம் பொறித்த 270 கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகளை கொடுத்து தமிழ் மக்கள் மது வாங்கி குடித்துள்ளனர்.
விடுதலை போராட்ட காலங்களில் மதுவை எதிர்த்து போராட்டங்கள் பலமாகவும், தீவிரமாகவும் நடந்தபோது காந்தியிடம் ‘மதுவின் விற்பனையால் வரும் கலால் வருமானத்தால் தான் கல்வி கூடங்கள் நடக்கின்றன என்று சிலர் கூறியபோது, அப்படியானால் கல்வி கூடங்களையே மூடி விடட்டும்" என்று கூறினார் காந்தி.
‘போதையை தந்த பின் நீதியை ஓதுதல் புத்தியுடைய ஓர் அரசாங்கமா?' என்று பாடினார் நாமக்கல் கவிஞர். ‘ஞானம் அடைவதற்கு தடையாய் இருப்பது மது' என்றார் புத்தபகவான். ‘போதைப்பொருளும், மதுவும் சைத்தானின் இருவரங்கள்' என்கிறது இஸ்லாம். ‘குடிப்பதை தடுப்பதே கோடி புண்ணியம்' என்றார் நாமக்கல்லார். எனவே, மீண்டும் வேண்டும் மதுவிலக்கு. கோடி புண்ணியம் பெறுவோம் அனைவரும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
குடிகாரர்களே.. இதைப் படித்த பிறகாவது வருந்துங்கள், திருந்துங்கள், சமூகத்தை சந்தோஷத்துடன் - நிம்மதியுடன் வாழ விடுங்கள்.












Click it and Unblock the Notifications