‘போதை’ மனைவி அடித்துக் கொலை... பலாத்கார நாடகமாடிய ‘குடிகார’ கணவன் கைது
திருப்பூர்: மது போதையில் மனைவியோடு ஏற்பட்ட தகராறில் அவரை அடித்துக் கொன்று விட்டு, அவரை யாரோ மர்ம நபர்கள் பலாத்காரம் செய்து கொலை செய்து விட்டார்கள் என நாடகமாடிய கணவனை உடுமலைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை நகர் கங்காதரன் லேஅவுட்டைச் சேர்ந்த கிருஷ்ணசாமியின் மனைவி பாக்கியலட்சுமி(வயது-55). இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இரவு புதிதாக கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலத்திற்கு அருகே ஆடைகளற்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
பாக்கியலட்சுமி பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவியது. இக்கொலை தொடர்பாக உடுமலை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையின் போது பாக்கியலட்சுமியின் கணவர் அளித்த முன்னுக்குப்பின் முரணான தகவல்களால் போலீசாரின் சந்தேகம் கிருஷ்ணசாமி மீது திரும்பியது, அதனைத் தொடர்ந்து அவரிடம் போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் தன் மனைவியை தானே கொலை செய்ததை அவர் ஒத்துக் கொண்டார்.
இது தொடர்பாக உடுமலை டிஎஸ்பி பிச்சை கூறுகையில், ‘சம்பவம் நடந்த மார்ச் 15-ஆம் தேதி இரவு கொலை செய்யப்பட்ட பாக்கியலட்சுமியும் மதுகுடிக்கும் வழக்கமுள்ளவர். சம்பவத்தன்று பாக்கியலட்சுமி மது போதையில் வீட்டில் இருந்துள்ளார்.
அந்த நேரத்தில், பாக்கியலட்சுமியின் கணவன் கிருஷ்ணசாமியும் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, கணவன், மனைவி இருவருக்கும் தகராறு நடந்துள்ளது. இதில், ஆத்திரமடைந்த பாக்கியலட்சுமி, கிருஷ்ணசாமி மீது போலீஸில் புகார் கொடுப்பதாகக் கூறி வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.
புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் அருகே வந்தபோது இருவருக்கும் கை கலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது கிருஷ்ணசாமி, பாக்கியலட்சுமியை பலமாக அடித்ததில் எதிர்பாராத விதமாக அவர் உயிரிழந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, கொலையை மறைப்பதற்காக வீட்டுக்குச் சென்ற கிருஷ்ணசாமி, வீட்டில் இருந்த மகளிடம் அம்மாவை காணவில்லை எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில், போலீஸார் நடத்திய விசாரணையில் பாக்கியலட்சுமியை கொலை செய்ததையும், பிறகு தனது மனைவியை மர்ம நபர்கள் யாரோ பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தியது அவரை கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த கொலை செய்யப்பட்ட பாக்கிய லட்சுமியின் உடலிலிருந்த சேலையை உருவி நிர்வாணமாக போட்டுவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டதாகவும் கிருஷ்ணசாமி ஒப்புக் கொண்டார். இதை தொடர்ந்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்' எனத் தெரிவித்தார்.