பெண்களை கேவலமாக பேசுவதா? திருவண்ணாமலை அருகே டி.எஸ்.பி.யை. ஓட ஓட அடித்து துவைத்த கிராம மக்கள்...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மறியலில் ஈடுபட்ட பெண்களை தவறாக பேசிய டிஎஸ்பியை கிராமமக்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கிராமத்தில் வீடு வீடாக தேடி கைது செய்து வருவதால் பலர் தலைமறைவாகி விட்டனர். இதனால் கிராமமே வெறிச்சோடி காணப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி,35, லாரி கிளீனர். அதே ஊரைச்சேர்ந்தவர் லாரி டிரைவர் சண்முகம்,35. இவர்கள் லாரியில், கடந்த 10ம் தேதிக்கு முன் மைதா லோடு ஏற்றிக்கொண்டு பெங்களூரில் இருந்து புதுசேரிக்கு சென்றனர். பின்னர் சிறிது நேரம் ஓய்வுக்காக விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில் சாலையோரம் லாரியை நிறுத்தினர்.

அப்போது லாரியின் மீது படுத்திருந்த ராமமூர்த்தி திடீரென தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. அவரை, டிரைவர் சண்முகம் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் அவர், தீவிர சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று மாலை ராமமூர்த்தி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து ராமமூர்த்தி சாவில் சந்தேகம் இருப்பதாக விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் போலீசார் எப்ஜஆர் போட்டதாக கூறப்படுகிறது.
உறவினர்கள் சாலை மறியல்
இதையறிந்த ராமமூர்த்தியின் மனைவி மணிமாலா,30 மற்றும் அவரது உறவினர்கள் ராமமூர்த்தி லாரியில் இருந்து விழுந்து இறந்துள்ளதாக எப்ஐஆர் போடவேண்டும். அப்படி போட்டால் நஷ்டஈடுபெற முடியும் என கூறி தண்டம்பட்டு கிராம தேசிய நெடுஞ்சாலையில் நேற்று திடீரென மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த செங்கம் டிஎஸ்பி சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தள்ளு முள்ளு
அப்போது, அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதத்துடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, அவர்களை டிஎஸ்பி சுந்தரமூர்த்தி கலைந்து போகும்படி கூறி தரக்குறைவாக பேசினாராம். இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த அவர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விரட்டி விரட்டி தாக்குதல்
இதையடுத்து மறியலில் ஈடுபட்ட ஒரு சில பெண்களை டிஎஸ்பி வலுக்கட்டாயமாக இழுத்து சென்று வேனில் ஏற்றியதாக கூறப்படுகிறது. வேனில் ஏறியபோது சிலர் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதனால் ஆவேசம் அடைந்த பெண்களும், ஆண்களும் டிஎஸ்பியை கைகளால் சரமாரியாக ஓட, ஓட விரட்டிச்சென்று தாக்கினர். இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸ் தடியடி
இதையடுத்து அங்கு வந்த ஆயுதப்படை போலீசார் தடியடி நடத்தினர். இதில் ஏராளமான பொதுமக்கள் காயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த தாசில்தார் காமராஜ், எஸ்பி பொன்னி மற்றும் ஏராளமான போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் செங்கம் வட்டாட்சியர் காமராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். மறியலை கைவிட மறுத்த கிராம மக்கள் டிஎஸ்பி சம்பவ இடத்திற்கு வர வேண்டும் என்றனர்.
பொதுமக்கள் தலைமறைவு
இதையடுத்து அதிரடிப்படையினருடன் டிஎஸ்பி வந்ததும், மறியலில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், பலரை தேடி வந்தனர். அவர்களில் 7 பேரை வெள்ளிக்கிழமை கைது செய்தனர். போலீசார் விசாரணை நடத்த வருவதை அறிந்த அந்த கிராம மக்கள் ஊரை விட்டு வெளியேறிவிட்டனர். ஆண்கள் பலரும் தலைமறைவாகிவிட்டதால் கிராமம் வெறிச்சோடி காணப்படுகிறது. தண்டம்பட்டு பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் பாதுகாப்புப் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications