சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு
சென்னை: மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ளவர்கள் தற்போது செலுத்த வேண்டிய மின்கட்டணத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 31-ம் தேதிவரை செலுத்த கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பெரும் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் வீட்டு மின் உபயோகிப்பாளர்கள் மின்கட்டணத்தை உடனே செலுத்தத் தேவையில்லை. அவர்கள் தற்போது செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ம் தேதிக்குள் செலுத்தலாம். அவ்வாறு காலதாமதமாக மின் கட்டணம் செலுத்துவதற்கு எவ்வித அபராதத் தொகையும் வசூலிக்கப்படமாட்டாது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் சுகாதாரத்தை பேணி காக்கவும், நோய் தொற்றை தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு தலா அரை கிலோ பிளீச்சிங் பவுடர் மற்றும் தண்ணீரை சுத்தம் செய்ய ஏதுவாக 20 குளோரின் மாத்திரைகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பிளீச்சிங் பவுடர் மற்றும் குளோரின் மாத்திரைகள் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வழங்கப்படும். உடனடியாக 2,000 டன் பிளீச்சிங் பவுடர் மற்றும் 1 கோடி குளோரின் மாத்திரைகள் வழங்கப்படும். மேலும், சுகாதாரத் துறையினால் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது நடத்தப்பட்டு வரும் 1,105 மருத்துவ முகாம்களை தொடர்ந்து நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குப்பை அகற்றும் பணியில் மாநகராட்சி மற்றும் நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் முழுவீச்சுடன் ஈடுபட்டு வருகின்றனர். நோய் தொற்று ஏற்படாமல் இருக்க அவர்களுக்கு தடுப்பூசிகள் உடனடியாக போடப்பட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த துப்புரவுப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு முக கவசங்கள், கையுறைகள், மழை கோட் மற்றும் ‘கம்பூட்ஸ்' ஆகியவற்றை உடனடியாக வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்கும் வகையில், 90 பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடிகள் மற்றும் 13 நகரும் அங்காடிகள் மூலமாக காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது, என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications