ஸ்டாலின் ராஜினாமா கண்துடைப்பு நாடகம் - அழகிரி, மகன் தயாநிதி கருத்து
சென்னை: மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்தி குறித்த மு.க.அழகிரியும், அவரது மகன் துரை தயாநிதியும் கருத்து தெரிவித்துள்ளனர். இருவருமே இந்த ராஜினாமா ஒரு நாடகம், கண்துடைப்பு என்று வர்ணித்துள்ளனர்.
லோக்சபா தேர்தலில் திமுக பெற்ற தோல்விக்குப் பொறுப்பேற்று கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் கட்சித் தலைவர் கருணாநிதியிடம் தெரிவித்துள்ளார். ஆனால் இதை ஏற்க கருணாநிதி மறுத்து விட்டதாக செய்திகள் கூறுகின்றன.
இந்த நிலையில் இதுகுறித்து மு.க.அழகிரி ஒரு பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில், நான் தேவையற்ற செய்திகளை பார்ப்பதும் இல்லை கேட்பதும் இல்லை. இவர் ராஜினாமா செய்வது போல் கடிதம் கொடுப்பார், ஆனால் ஜால்ராக்கள் சிலர் வேண்டாம் என தடுப்பார்கள். தலைவரும் ராஜினாமாவை ஏற்க முடியாது என்பார். பொறுத்திருந்து பாருங்கள், இது ஒரு நாடகம், கண்துடைப்பு என்றார் அழகிரி.
அவரது மகன் துரை தயாநிதி அழகிரி டிவிட்டரில் ஸ்டாலின் ராஜினாமா குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
ஒரு டிவிட்டில், இந்த நாடகம் திமுகவை முழுமையாக கைப்பற்றப் போடப்படும் நாடகமா என்று கேட்டுள்ளார்.
அடுத்த ட்விட்டில், தலைவர் கலைஞர் ராஜினாமாவை ஏற்கும் வரையில் யாரும் இதை நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார். அடுத்த ட்விட்டில், இப்போது அனைத்து மாவட்டச் செயலாளர்களும், தலைவரைப் பார்த்து ராஜினாமாவை ஏற்க வேண்டாம் என்று வற்புறுத்துவார்கள். அவரும் ஏற்பார், வழக்கம் போலவே எல்லாம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இன்னொரு டிவிட்டில் கண் துடைப்பு என்று போட்டுள்ளார் தயாநிதி அழகிரி.