அண்ணா அறிவாலயத்துக்கு வந்த கருணாநிதியின் கன்னத்தை செல்லமாக கிள்ளி மகிழ்ந்த துரைமுருகன்
அண்ணா அறிவாலயத்துக்கு வந்த கருணாநிதியின் கன்னத்தை திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் செல்லமாக கிள்ளி மகிழ்ந்தார்.
Recommended Video
சென்னை: அண்ணா அறிவாலயத்துக்கு நேற்று கருணாநிதி வருகை தந்ததால் மகிழ்ச்சியில் திளைத்த துரைமுருகன், அவரது கன்னத்தை கிள்ளினார்.
கடந்த ஓராண்டாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள கருணாநிதி கட்சி சார்ந்த விஷயங்களில் நேரடியாக தலையிடுவது, தேர்தல் பிரசாரங்களில் பங்களிப்பது, குடும்ப மற்றும் கட்சியினரின் விழாக்களில் கலந்து கொள்வது போன்றவற்றை நிறுத்திக் கொண்டார்.
மேலும் அவருக்கு பிடித்த இடங்களான முரசொலி அலுவலகம் மற்றும் கட்சி அலுவலகத்துக்கு வருவதையும் நிறுத்திக் கொண்டதால் தொண்டர்கள் சற்று வேதனை அடைந்தனர்.
கருணாநிதி கிரிக்கெட்
அருள்நிதியின் மகனும் தனது கொள்ளுபேரனுமாகிய மகிழனுடன் கருணாநிதி கோபாலபுரம் இல்லத்தில் கிரிக்கெட் விளையாடியது போன்ற வீடியோ வெளியானதை கண்ட தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அவரது உடல்நிலை நாளுக்கு நாள் முன்னேறி வருவதால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்து வருகின்றனர்.
பிடித்தவர் யார் தெரியுமா?
சமீபத்தில் கருணாநிதியின் தொண்டையில் வைக்கப்பட்ட ஒரு கருவி எடுக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் பேச்சு பயிற்சி அளித்தனர். அப்போது உங்கள் பெயர் என்ன என கேட்டதற்கு மு.கருணாநிதி என்றார். உங்களுக்கு பிடித்த தலைவர் யார் என்று கேட்டபோது அண்ணா என்று பட்டென பதில் அளித்ததாக துரைமுருகன் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.
அண்ணா அறிவாலயத்தில்...
அண்ணா அறிவாலயத்துக்கு நேற்று இரவு திடீரென அழைத்து வரப்பட்டார் கருணாநிதி. அப்போது அங்கிருந்த திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி, துரைமுருகன், பொன்முடி, ஸ்டாலின், செல்வம் உள்ளிட்டோர் கருணாநிதியை வரவேற்றனர். அப்போது உற்சாகமிகுதியில் துரைமுருகன் குழந்தையின் கன்னத்தை கிள்ளுவதை போல் கருணாநிதியின் கன்னத்தை கிள்ளி மகிழ்ந்தார்.
கன்னத்தை வருடி
கருணாநிதியின் உடல் முன்னேற்றத்தால் மகிழ்ச்சி அடைந்து வரும் துரைமுருகன் கடந்த ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதி அண்ணா அறிவாலயத்துக்கு வந்த கருணாநிதி அங்கிருந்த பதிவேட்டில் மு. கருணாநிதி என்று கையெழுத்திட்டதை பார்த்து கருணாநிதியின் கன்னத்தை வருடி, திருஷ்டி கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.