ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பளித்தால் பட்டாசு வெடிப்பவர்கள்தான் அதிமுககாரர்கள்.. துரைமுருகன் சரவெடி
உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவை குற்றவாளி என்று தீர்ப்பளித்தால் அது கூட தெரியாமல் பட்டாசு வெடிப்பவர்கள்தான் அதிமுககாரர்கள் என்று துரைமுருகன் கூறியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை சசிகலாவின் தலைமையை ஏற்காத அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
1991-1996 ஆம் ஆண்டில் ஜெயலலிதா ஆட்சியின் போது நடைபெற்ற ஊழல் வழக்கு 21 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு தற்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தத் தீர்ப்பை இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடிய அதிமுகவினர் குறித்தும் அடுத்த ஆட்சி அமைக்க உரிமை கோரும் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கூறியதாவது:

அக்யூஸ்ட் 1
சொத்துக் குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளி ஜெயலலிதா. அவர் ஊழல் செய்திருக்கிறார். தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி. 4 ஆண்டு கால சிறைக்கு போக வேண்டியவர். 100 கோடி ரூபாய் அபராதம் கட்ட வேண்டியவர். எனவே, ஜெயலலிதா தண்டனைக்குள்ளாகிறார். அவர் மரணம் அடைந்துவிட்ட காரணத்தால் அவர் இந்த தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

பட்டாசு வெடிப்பு
ஜெயலலிதாதான் குற்றம் செய்தார் என்று தீர்ப்பு முழுக்கவும் குறிப்புகள் இருக்கிறது. தங்கள் தலைவரான ஜெயலலிதா தண்டனைக்குரியவர் என்று தீர்ப்பில் சொல்லப்பட்ட நிலையில், அதுபற்றி தெரியாமலேயே பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்பவர்கள்தான் அதிமுகவினர்.

ஆட்சிக்கு பலம்
அதிமுகவின் சட்டசபை குழுத் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு போதிய பலம் இருக்கிறதா என்பதை ஆளுநரிடம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். எம்எல்ஏக்களிடம் இருந்து பெறப்பட்ட கையெழுத்து பட்டியலை எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரிடம் வழங்கினாலும், அவருக்கு பெரும்பான்மை இருக்கிறதா என்பதை உறுதி செய்த பின்னரே ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும்.

வரவேற்பு
21 ஆண்டுகள் நடைபெற்ற ஒரு வழக்கில் தீர்ப்பு வரவேற்கக் கூடியது. தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதை பொருத்திருந்து பார்ப்போம் என்று துரைமுருகன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications