கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்.. ஸ்டெர்லைட் அரசாணை பற்றி துரைமுருகன் தாக்கு
ஸ்டெர்லைட்டை மூடும் தமிழக அரசின் நடவடிக்கை கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரத்திற்கு ஒப்பானது என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அரசாணை வெளியிட்டுள்ளார். இது கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதற்கு ஒப்பானது என்று திமுகவின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் கடந்த 22ம் தேதி நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் , போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் அரசைக் கண்டித்தும் காவல்துறையைக் கண்டித்தும் போராட்டங்கள் நடைபெற்றன. இதுதொடர்பாக வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதால், ஆலையை மூட உத்தரவிட்டுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் பேசுகையில், 100 நாட்களுக்கு முன்னதாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தால், 13 உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும்.
அரசின் இந்த நடவடிக்கை கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதற்கு ஒப்பானது. மக்களின் போராட்டத்திற்கு அரசு பயந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.