திமுக "ஐஸ்கிரீம்".. தேமுதிக "செர்ரி".. விஜயகாந்த் எங்களுக்குத் தேவையில்லை... துரைமுருகன் அதிரடி!
வேலூர்: திமுக ஐஸ்கிரீம் மாதிரி. தேமுதிக அதன் மீது வைக்கப்படும் செர்ரிப் பழகம்தான். ஐஸ்கிரீமைத்தான் அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். செர்ரியைத் தூக்கி எறிந்து விடுவார்கள். விஜயகாந்த்தும், தேமுதிகவும், எங்களுக்குத் தேவையில்லை என்று திமுக மூத்த தலைவர் துரைமுருகன் கூறியுள்ளார்.
பழம் கனிந்து வருகிறது. விரைவில் பாலில் விழும் என்று முன்பு தேமுதிக கூட்டணி குறித்து திமுக தலைவர் கருணாநிதி கூறியிருந்தார். ஆனால் பழம் என்ன ஆனது, எங்கே போனது என்று தெரியவில்லை.
இந்த நிலையில் இன்னொரு பழக் கதையைக் கூறி திமுகவுக்கு தேமுதிக தேவையில்லை என்று துரைமுருகன் அட்டாக் செய்துள்ளார்.

திருப்பத்தூரில் விழா
திருப்பத்தூரில் மதிமுக நகரச் செயலாளர்ரகுநாத் தலைமையில் மதிமுக மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் துரைமுருகன் கலந்து கொண்டார்.

துரைமுருகன் அதிரடிப் பேச்சு
இதில் துரைமுருகன் கலந்து கொண்டார். விழாவில் அவர் சிறப்புரையாற்றினார். அப்போது தேமுதிக தேவையே இல்லை என்று அதிரடியாக கூறினார் துரைமுருகன்.

அடேங்கப்பா இம்புட்டுப் பேரா!
துரைமுருகன் பேசுகையில், திமுகவில் இணைந்த அனைவரையும் வரவேற்கிறேன். மதிமுகவிலிருந்து இருந்து மட்டும் 400 பேர் வந்திருக்கிறீர்கள். இவ்வளவு பேர் அந்த கட்சியில் இருந்ததே பெரிய விஷயம்.

ஸ்டாலின் போட்டியிடுவதாக நினைத்துக் கொண்டு
வேலூர் மாவட்டத்தில் 2வது பெரிய நகரம் திருப்பத்தூர். இது தனி மாவட்டமாக மாற உள்ளது. வேலூர் மாவட்டத்தில் 13 தொகுதிகளில் யார் வேட்பாளர் என்பதை பார்க்காதீர்கள். கருணாநிதி, மு.க.ஸ்டாலின் போட்டியிடுவதாக எண்ணி செயலாற்ற வேண்டும்.

திமுக நேரடியாக போட்டியிடும்
கடந்த சட்டசபைத் தேர்தலில் திருப்பத்தூர் தொகுதி கூட்டணிக்குப் போய் விட்டது. இந்த முறை திமுகவே போட்டியிடும். அதைப் பெற்றுத் தருவது எனது கடமை. வெல்ல வைக்க வேண்டியது உங்களது கடமை.

184 தொகுதிகளில் வெல்வோம்
1971ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என அனைவரும் கனவு கண்டனர். ஆனால் 184 தொகுதிகளில் திமுக வென்றது. அதேபோல இந்த முறையும் 184 தொகுதிகளில் திமுக வெல்லும்.

விஜயகாந்த் தேவையில்லை
விஜயகாந்த் எங்களுக்கு தேவை இல்லை. திமுக ஐஸ்கிரீம் போல. விஜயகாந்த் அதன் மீது வைக்கப்படும் செர்ரி பழத்தை போல. செர்ரியைத் தூக்கி எறிந்து விடுவார்கள். ஐஸ்கிரீமைத்தான் சாப்பிடுவார்கள் என்றார் துரைமுருகன் அதிரடியாக
ஆஹா.. இன்னும் எத்தனை எத்தனை பழக் கதைகள் வரப் போகுதோ!












Click it and Unblock the Notifications