கொட்டும் மழையிலும் ரெயின் கோட் அணிந்தபடியே! மயிலாடுதுறை கோயிலில் பால் குடம் எடுத்த துர்கா ஸ்டாலின்!
மயிலாடுதுறை: திருவெண்காடு கோயிலில் கார்த்திகை மாதம் 3ஆவது ஞாயிற்றுக்கிழமையான நேற்றைய தினம் கொட்டும் மழையில் ரெயின் கோட் அணிந்தபடி முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் பால்குடம் எடுத்தார்.
முதல்வர் ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்டோர் கடவுள் மறுப்பு கொள்கையை பின்பற்றி வருகிறார்கள். எனினும் அடுத்தவர்களின் நம்பிக்கையில் தலையிடுவதில்லை. இதற்கு சிறந்த உதாரணம் துர்கா ஸ்டாலின்.

இவருக்கு கடவுள் பக்தி அதிகம். இவர் கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் பெரும்பாலான கோயில்களுக்கு சென்று பிரார்த்தனை செய்து வருகிறார். அந்தந்த கோயிலில் நடைபெறும் திருவிழாக்களிலும் இவர் கலந்து கொள்வது வழக்கம்.
ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது நிறைய கோயில்களில் துர்கா பூஜை, புனஸ்காரங்களை செய்திருந்தார். அதன் பலனாகவே ஸ்டாலின் முதல்வரானார் என சொல்லப்பட்டது. அந்த வகையில் மயிலாடுதுறையில் ஒரு கோயிலில் பால்குடம் ஏந்தி சென்றுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது. இங்கு தேவார பாடல் பெற்ற தலமாகும். இது காசிக்கு இணையானது என சொல்லப்படுகிறது. இங்கு சிவபெருமானின் 5 முகங்களில் ஒன்றான அகோர மூர்த்தி மற்றும் நவகிரகங்களில் புதன் பகவான் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

இந்த கோயிலில் அகோர மூர்த்திக்கு மகா அபிஷேகம் ஏன் நடைபெறுகிறது என்றால், முன்பொரு காலத்தில் மருத்துவாசூரன் என்ற அசுரன் ஈசனிடம் பெற்ற சூலாயுதத்தை கொண்டு தேவர்கள், முனிவர்களை சதா சர்வகாலமும் துன்புறுத்தி வந்தான். இதனால் கோபமடைந்த நந்தி தேவர், அந்த அசுரனுடன் போர் புரிய தயாராகி சென்றார்.
அவரை மருத்துவாசூரன் 9 இடங்களில் சூலாயுதத்தால் குத்தி காயமடையச் செய்துவிட்டான். இதனால் சிவபெருமான் வெகுண்டு எழுந்தார். தனது 5 முகங்களில் ஒன்றான அகோர மூர்த்தியாக அசுரனை அழிக்க முற்பட்ட போதுதான் அவரை கண்டு அஞ்சிய மருத்துவாசூரன் , சிவனிடம் சரணடைந்தான்.

இதை போற்றும் வகையில்தான் கார்த்திகை மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை அன்று ஆண்டுதோறும் அகோர மூர்த்திக்கு மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அப்போது தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து வந்து அகோர மூர்த்திக்கு அபிஷேகத்திற்கு கொடுத்தனர். அந்த நேரம் பார்த்து மழை கொட்டிய நிலையிலும் துர்கா ஸ்டாலின் உள்ளிட்டோர் ரெயின்கோட் அணிந்து கொண்டு பால்குடம் ஏந்தி வந்தனர்.












Click it and Unblock the Notifications