பொதுத்துறை தேர்வுகளுக்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பம் - அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் துவக்கம்
சென்னை: இசேவை மையங்கள் மூலமாக தமிழக அரசின் வருவாய்த்துறை மற்றும் சமூக நலத்துறை சார்ந்த 15,55,710 மனுக்கள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டு சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுத்துறை தேர்வுகளுக்கும் இம்மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 7,80,784 நபர்களுக்கு பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. 28,658 நபர்களுக்கு கைபேசி எண், இமெயில் முகவரி மாற்றம் செய்து தரப்பட்டுள்ளது. 2,818 நபர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.
தற்போது 264 வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், சென்னை மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்கள் என 280 இடங்களில் உள்ள இம்மையங்கள் வாயிலாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் வழங்கப்படும் இணைய வழிவிண்ணப்ப சேவைகளான நிரந்தரப் பதிவு செய்தல், தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல், விண்ணப்பங்களில் மாறுதல் செய்தல் மற்றும் விண்ணப்பத்தின் நகல் பெறுதல் ஆகிய சேவைகளை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் துவக்கி உள்ளது.
நிரந்தரப் பதிவு செய்ய ரூபாய் 50ம், தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ரூபாய் 30ம், விண்ணப்பங்களில் மாறுதல் செய்ய ரூபாய் 5ம், விண்ணப்பங்களில் மாறுதல் செய்து விண்ணப்பத்தின் நகல் பெற ரூபாய் 20ம், சேவைக் கட்டணமாக வசூலிக்கப்படும். மேலும், விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்திற்கு செலுத்த வேண்டிய நிரந்தரப் பதிவுக் கட்டணமான ரூபாய் 50ம் மற்றும் நிர்ணயம் செய்யப்பட்டதேர்வுக் கட்டணம் ஆகியவற்றை இம்மையங்களில் செலுத்தும் வசதிசெய்யப்பட்டுள்ளது.
மேலும் கட்டணம் செலுத்தியதற்கான ஒப்புகைச் சீட்டினை உடனடியாக பெற்றுக் கொள்ளலாம். எனவே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் அரசு இ சேவை மையங்களை அணுகி பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.