எதற்கெடுத்தாலும் டெல்லின்னா எப்படி?... “சுதந்திரம்” கேட்கிறார் ஈ.வி.கே.எஸ்.!
சென்னை: எதற்கெடுத்தாலும் டெல்லி உத்தரவுக்கு காத்திருக்க முடியுமா, கட்சியை வளர்க்க முழு சுதந்திரம் அளியுங்கள் எனக் கருத்துத் தெரிவித்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணைய உறுப்பினர் மறைந்த லதா பிரிய குமாரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி சத்திய மூர்த்திபவனில் அவரது உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து விழாவில் கலந்து கொண்டு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதாவது:-
1967-க்கு பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர முடியவில்லை, இதற்கு என்ன காரணம் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தோல்வியை பற்றி அலசுவது மட்டும் முக்கியம் அல்ல. கட்சியை வளர்ப்பதுதான் முக்கியம். எதற்கெடுத்தாலும் டெல்லி செல்ல வேண்டும் என்றால் தமிழகத்தில் கட்சியின் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும். ஒரு விஷயத்தை டெல்லி கொண்டு சென்று அவர்களது உத்தரவு கிடைப்பதற்குள் அந்த விஷயமே முடிந்துவிடும்.
இதனால்தான் மக்களின் கோபத்துக்கு ஆளாக வேண்டி உள்ளது. தமிழகத்தில் காங்கிரசுக்கு சுதந்திரம் வேண்டும். யாருடன் கூட்டணி வைத்தால் பலம் என்பது நமக்குத்தான் தெரியும். கூட்டணி முடிவை டெல்லி அறிவிக்கட்டும். ஆனால் அதற்கு முன் எங்களிடம் கருத்து கேளுங்கள். கட்சியை வளர்க்க முழு சுதந்திரத்தை அளியுங்கள். தேர்தல் வெற்றிக்காக மாநிலங்களை அடமானம் வைப்பதை விட்டு விடுங்கள்.
தமிழக அரசியலில் விரைவில் மிகப்பெரிய வெற்றிடம் உருவாக உள்ளது. அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய ஜி.கே. வாசன், ‘‘தோல்வியை விட வெற்றியை அதிகமாக சந்தித்த கட்சிதான் காங்கிரஸ். நடந்து முடிந்த தேர்தலுக்கு பிறகும் கட்சி உயிரோட்டமாக உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் வருகிற 27-ந்தேதி நடைபெறும் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி காட்டுவோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications