தேர்தல் முடிவுக்கு பிறகு தனது தவறை உணர்வார் விஜயகாந்த்: இளங்கோவன் அட்வைஸ்
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு தனது முடிவு தவறு என்பதை விஜயகாந்த் உணருவார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த இளங்கோவன் கூறியதாவது:-
தேமுதிக தொண்டர்களின் விருப்பத்துக்கு மாறாக, தனித்துப் போட்டியிடப் போவதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ள முடிவு தவறானது. அரசியலில் மிகப் பெரிய வளர்ச்சியை அடைய வேண்டிய விஜயகாந்த், அதைப் பாழ்படுத்திக் கொண்டார். தொண்டர்களின் வாழ்க்கையையும் பாழ்படுத்தியுள்ளார்.

தேர்தல் முடிவுக்குப் பிறகு தனது முடிவு தவறு என்பதை விஜயகாந்த் உணருவார். திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு வர வேண்டும் என்று விஜயகாந்துக்கு ஏற்கெனவே பல முறை அழைப்பு விடுத்துள்ளோம். திரும்பத் திரும்ப அழைப்பதால் பிரயோஜனம் எதுவும் இல்லை.
அதிமுகவை வீழ்த்துவதற்கு திமுக- காங்கிரஸ் கூட்டணியே போதுமானதாகும். முஸ்லிம் லீக் உள்ளிட்ட வேறு சில கட்சிகளுக்கும் கூட்டணிக்கு வரத் தயாராக உள்ளன. திமுக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் தொடர்பாக கருணாநிதி விரைவில் அறிவிப்பார்.
தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் பிரச்னை எதுவும் இருக்காது. காங்கிரஸின் சுயமரியாதைக்கும், திமுகவின் சுயமரியாதைக்கும் பாதகம் இல்லாத வகையில் தொகுதி பங்கீடு கிடைக்கும். பிரசாரத்துக்கு சோனியா -ராகுல் ஆகியோர் வர உள்ளனர். விவசாயிகள், ஏழைகள், வேலை இல்லாத இளைஞர்களை மேம்படுத்தும் வகையில் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை இருக்கும் என்று இளங்கோவன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications