சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு விடுதலை!
திருவண்ணாமலை: முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீதான சொத்துக் குவிப்பு வழக்கை திருவண்ணாமலை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் எ.வ.வேலு இருந்தார். ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் தொடர்ச்சியாக திமுக அரசில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் மீது சொத்து குவிப்பு வழக்குகள் போடப்பட்டன.
அதில் எ.வ.வேலுவும் அடக்கம். 2011 செப்டம்பர் மாதத்தில் வேலுவின் கல்லூரிகள், நிறுவனங்கள் சென்னையில் உள்ள அவரது வீடு ஆகியவற்றில் ஒரே நேரத்தில் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
இதனைத்தொடர்ந்து எ.வ.வேலு மற்றும் அவரது மனைவி ஜீவா வேலு ஆகியோர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதியப்பட்டது. அந்த வழக்கு திருவண்ணாமலை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த 4 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் ஒவ்வொரு 15 தினங்களுக்கு ஒருமுறை நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராகினர்.
6 மாதத்திற்கு முன்பு வழக்கில் வாதங்கள் துவங்கின. எ.வ.வேலு சார்பில் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, கே.வி.மனோகரன், பழனி ஆகியோர் ஆஜராகி தங்கள் வாதங்களை எடுத்து வைத்தனர்.
இந்த நிலையில் இன்று நீதிபதி அறிவொளி, இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை வழக்கினை தள்ளுபடி செய்ததுடன் இந்த வழக்கில் இருந்து எ.வ.வேலு, ஜீவா வேலு ஆகிய இருவரையும் விடுதலை செய்வதாக அறிவித்தார்.