என்னது நாங்கள் சிறிய கட்சியா?: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது 'கொங்குநாடு' ஈஸ்வரன் பாய்ச்சல்!!
கோயம்புத்தூர்: கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியை சிறிய கட்சி என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியிருப்பதற்கு அக்கட்சியின் பொதுச்செயலர் ஈஸ்வரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாமக்கல்லில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவன் பேட்டியளிக்கும்போது ஜி.கே.வாசன் கட்சியை பற்றி பேசி உள்ளார். அப்போது, ஈஸ்வரன் கட்சியை போல சிறிய கட்சி ஆவார் என்று கூறி உள்ளார்.
இளங்கோவனுக்கு எங்கள் கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். இளங்கோவன் வரம்பு மீறி பேசுகிறார். உங்கள் வாக்கு வங்கி என்ன? என்பதை தெரிந்து தான் பேசுகிறீர்களா?
பேச்சு சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற நினைப்பா? காங்கிரஸ் கட்சி மாநில தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து என்ன பேசுகிறீர்கள்? என்பதை கொஞ்சம் திரும்பி பாருங்கள். இது தான் காங்கிரஸ் கட்சியை வளர்க்கும் வழியா? கார்த்திக் சிதம்பரத்தை பற்றியோ... ஜி.கே.வாசன் கட்சியை பற்றியோ எப்படி வேண்டுமானாலும் பேசுங்கள். அது உங்கள் குடும்ப பிரச்சினை.
ஆனால் அடுத்தவர்களை பற்றி, எங்கள் கட்சியை பற்றி பேசுவதை விட்டு விடுங்கள். மோடியை வெளிநாடு வாழ் இந்தியர் என்றும் தமிழக பா.ஜ.க. தலைவர்கள் மோடி இந்தியா வரும்போது மனு கொடுங்கள் என்றும் நீங்கள் கிண்டல் செய்திருக்கிறீர்கள். ஒரு அன்னிய நாட்டை சேர்ந்தவரை கட்சி தலைவியாக நீங்கள் கொண்டுள்ளீர்கள் என்பது உங்களுக்கு ஞாபகம் இல்லையா?
மற்றவர்களை பார்த்து ஏளனமாக பேசும் உங்கள் பேச்சை வேண்டுமானால் காங்கிரஸ்காரர்கள் ரசிக்கலாம். ஆனால், பொது மக்கள் ரசிக்க வில்லை. இப்படி பேசுவதன் மூலம் காங்கிரஸ் கட்சியை உங்களால் வளர்க்க முடியாது. பலவீனப்படுத்த தான் முடியும். தயவு செய்து மாறுங்கள்.
அரசின் கொள்கைகள், திட்டங்கள் பிடிக்கவில்லை என்றால் அதை விமர்சனம் செய்யுங்கள். நாட்டில் உள்ள கட்சிக்களை ஏளனம் செய்வது என்ன நியாயம்?
உங்கள் கட்சி வளர்ச்சியில் கவனம் செலுத்துங்கள். தொண்டர்களுக்கு நல்ல வழியை உங்கள் அனுபவத்தின் மூலம் காட்டுங்கள். தொடர்ந்து இதே பாதையில் பயணித்தால் 2016 சட்டமன்ற தேர்தலில் 2014 நாடாளுமன்ற தேர்தலை போல தீண்டத்தகாதவர்களாக ஆகி போவீர்கள்.
நீங்களும் கொங்கு நாட்டின் மண்ணின் மைந்தர் என்கிற முறையில் உங்கள் மீது அன்பும் பாசமும் மரியாதையும் வைத்திருக்கிறேன். தயவு செய்து சங்கடப்படுத்தாதீர்கள். கொங்கு மண்டலத்தில் எங்களுக்கு இருக்கிற வாக்கு வங்கி காங்கிரசுக்கு இல்லை என்பதையும் மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
கொங்கு நாட்டில் எங்களைவிட காங்கிரஸ் கட்சி சிறிய கட்சி என்பதை புரியாதவர் போல் நடிக்காதீர்கள். தேவையில்லாமல் எங்களை சீண்டி பார்க்காதீர்கள்.
இவ்வாறு ஈஸ்வரன் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.