இன்று நள்ளிரவு வரை மின்கட்டணம் கட்டலாம்.. பழைய ரூ.500 நோட்டை கொடுக்கலாம்!
இன்று நள்ளிரவு வரை மின்கட்டண வசூல் மையங்கள் திறந்திருக்கும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.
சென்னை: பொதுமக்கள் மின்கட்டணம் செலுத்துவதற்கு வசதியாக இன்று நள்ளிரவு வரை மின் கட்டண வசூல் மையங்கள் திறந்திருக்கும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் 9ம் தேதியில் இருந்து செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதனால் மக்கள் அன்றாட செலவுகள் செய்வதற்கே முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனிடையே மின்சார கட்டணம் கட்டுவதற்கான நேரமும் வந்துவிட்டது. இதனால் எப்படி கட்டணத்தை கட்டுவது என்று தெரியாமல் மக்கள் அல்லல்பட்டு வந்தனர்.
இதனையடுத்து, தாழ்வழுத்த மின் நுகர்வோர்களின் மின்கட்டணம் செலுத்தும் நாளை ஒரு வாரத்திற்கு நீடித்து உத்தரவிடப்பட்டது. ஆனால், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் பெறப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்துவதற்கு வசதியாக இன்று நள்ளிரவு வரை மின் கட்டண மையங்கள் திறந்திருக்கும என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. மேலும், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செலுத்தியும் மின் கட்டணத்தை செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பிற்பகல் 2.45 மணி வரை மட்டுமே இயங்கும் மின் கட்டண வசூல் மையங்கள் இன்று நள்ளிரவு வரை செயல்படும். அதனால் மக்கள் கவலைப்படாமல் தங்களது மின் கட்டணங்களை செலுத்ததலாம்.
முன்னதாக, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் பெறப்பட மாட்டாது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்திருந்த நிலையில் தற்போது பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை கொண்டு பணம் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்களுக்கு ஏற்படும் அலைச்சல் சற்று குறைந்துள்ளது.