தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத 42 வேட்பாளர்களுக்கு 3 ஆண்டுகள் தடை: ராஜேஷ் லக்கானி
சென்னை: தேர்தல் செலவு கணக்கை முறையாக தாக்கல் செய்யாத 42 வேட்பாளர்கள் 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கப்பட்டிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் முடிவு வெளியான 30 நாட்களுக்குள் தங்கள் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத வேட்பாளர்கள், 3 ஆண்டுகளுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட தேர்தல் கமிஷன் தடை விதிக்க முடியும்.

1951-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 8ஏ 11(ஏ) (2) மற்றும் 10ஏ ஆகிய பிரிவின் படி, தமிழகத்தில் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் 42 பேர் மீண்டும் தேர்தலில் போட்டியிட தேர்தல் கமிஷன் தடை விதித்து இருக்கிறது.
2011 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட 10 வேட்பாளர்களுக்கும், 2014 மக்களவை தேர்தலில் போட்டியிட்ட 32 வேட்பாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இவர்கள் தேர்தல் செலவுகளை முறையாக தாக்கல் செய்யாத காரணத்தால் வரும் சட்டசபை தேர்தலிலும், அடுத்த 3 ஆண்டுகளுக்கு நடைபெறும் எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது. 42 வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications