நாடாளுமன்ற தேர்தலை ஒரே கட்டமாக நடத்த தேர்தல் ஆணையத்திடம் தமிழக கட்சிகள் கோரிக்கை
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என தமிழகக் கட்சிகள் இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளன.
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வரும் 6-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. முன்னதாக, இதற்கான பணிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் ஏற்கெனவே ஆலோசனை நடத்தியுள்ளார்.
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக தென் மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஏற்கெனவே ஆலோசனை நடத்தியுள்ளது. இந்நிலையில், தேர்தல் குறித்து தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் கருத்துகளைக் கோரும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்பது அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தலைமை தாங்க அதிமுக, திமுக, காங்கிரஸ், பாரதிய ஜனதா, உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
அப்போது, திமுக சார்பில் நேர்மையான தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் எனவும், தேமுதிக பிரதிநிதி சந்திரகுமார் சார்பில் தங்கள் கட்சித் தலைவர் விஜயகாந்திற்கு மத்திய அரசின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப் பட்டது.
மேலும், நாடாளுமன்ற தேர்தலை தமிழகத்தில் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று அனைத்து கட்சி பிரதிநிதிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications