ஸ்ரீரங்கம் தொகுதிக்கு பிப்ரவரியில் தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையம் திட்டம்
சென்னை: ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கு பிப்ரவரி மாதத்தில் இடைத்தேர்தல் நடத்த தலைமைத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு கடந்த செப்டம்பர் மாதம் 27-ஆம்தேதி பெங்களூர் சிறப்பு நிதிமன்றத்தில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டது. இதனையடுத்து அவர் முதல்வர் பதவியை இழந்தார். அதோடு ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ. பதவியும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 8-ன் கீழ் ஜெயலலிதா எம்.எல்.ஏ. பதவியை இழந்ததாக கூறப்பட்டது. ஆனால் சட்டசபை செயலாளர் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தால்தான் இது நடைமுறைக்கு வரும்.
தமிழக சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் இது தொடர்பாக தீர்ப்பு ஆவணங்களைப் பெற்று ஆய்வு செய்து வந்தார்.
கடந்த சனிக்கிழமை ஸ்ரீரங்கம் தொகுதி காலி இடமாக சபாநாயகர் தனபால் உத்தரவின் பேரில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி வெற்றிடமாக இருப்பதாக தமிழக தேர்தல் கமிஷனுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து ஸ்ரீ ரங்கம் சட்டசபை தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாக தமிழக தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா நேற்று அறிவித்தார்.
ஒரு தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டால் அந்த தொகுதிக்கு அடுத்த 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. அந்த விதிப்படி ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கு வரும் மார்ச் மாதம் 27-ஆம்தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். எனவே தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் இடைத்தேர்தலுக்காக ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர்.
தமிழ்நாட்டில் தற்போது வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடந்து வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்கவும், நீக்கவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இந்த விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட்டு ஜனவரி மாதம் 5-ஆம்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. எனவே ஸ்ரீரங்கம் தொகுதி இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5-ஆம்தேதிதான் தெரிய வரும். அதன் பிறகே ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட முடியும்.
எனவே ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீரங்கம் சட்டசபை இடைத்தேர்தலில் முக்கிய கட்சிகள் களம் இறங்க தீவிரமாக உள்ளன. சில கட்சிகள் வேட்பாளர் தேர்வை கூட ஓசையின்றி தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. தை பொங்கல் பண்டிகைக்குப் பிறகு ஸ்ரீரங்கம் இடைதேர்தல் சூடு பிடிக்கும் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications