ஜெயலலிதா கோலம் போடாதீங்க... பாய்ந்தோடி தடுத்து நிறுத்திய பறக்கும்படை அதிகாரிகள்!
ராசிபுரம்: நாமக்ககல் மாவட்டம் ராசிபுரத்தில் அதிமுக ஏற்பாடு செய்திருந்த கோலப் போட்டிக்கு தேர்தல் அதிகாரிகள் தடை விதித்து தடுத்து நிறுத்தி விட்டனர்.
தமிழக சட்டசபைக்குத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்து விட்டன.

இதை அரசியல் கட்சியினர் சரியாக கடைப்பிடிக்கின்றனரா என்று தீவிரமாகக் கண்காணித்து வருகிறது தேர்தல் ஆணையம். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும், தொகுதியிலும் பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் தேர்தல் நடத்தை விதி மீறல்களைக் கண்டுபிடித்துத் தடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் ராசிபுரத்தில் அதிமுக சார்பில் கோலப் போட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதாவது அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவின் உருவத்தை கோலமாக வரையும் போட்டியாகும் இது.
இதற்குப் பரிசுகளும் அறிவிக்கப்பட்டிருந்தன. இதுகுறித்துத் தகவல் கிடைத்ததும் பறக்கும் படை அதிகாரிகள் விரைந்து வந்து, இது வாக்காளர்களை கவரும் நடவடிக்கை. இதை அனுமதிக்க முடியாது என்று கூறி கோலப் போட்டியை நடத்த தடை விதித்தனர். இதனால் கோலப் போட்டி நடைபெறவில்லை.












Click it and Unblock the Notifications