தொண்டர்களுக்காக வைத்திருந்த 'லட்டு.. சமோசா'.. சீஸ் செய்த அதிகாரிகள்!
புதுச்சேரி: புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் தொண்டர்களுக்கு வழங்குவதற்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த லட்டுக்கள், சமோசாக்களை தேர்தல் அதிகாரிகள் வந்து பறிமுதல் செய்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டசபைத் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் இன்று வில்லியனூர் லட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கும் முன்பு தொண்டர்களுக்கு லட்டு-சமோசா வழங்க தயாராகி கொண்டிருந்தது. இதை அறிந்த தேர்தல்துறை அதிகாரிகள் கூட்டம் நடந்த திருமண மண்டபத்துக்கு வந்து அங்கு வைத்திருந்த லட்டு மற்றும் சமோசாவை பறிமுதல் செய்தனர். அதன் பின்னர் கூட்டம் தொடங்கியது.
இந்தப் பரபரப்பை விட அடுத்து நடந்த கோஷ்டி மோதல்தான் படு பரபரப்பாக இருந்தது. மொத்தத்தில் இந்த லட்டு சமோசா பறிமுதலும், கோஷ்டிப் பூசலுமாக இந்தக் கூட்டம் நடந்தது. ஆனால் இந்த சம்பவங்கள் நடந்தபோது ரங்கசாமி அங்கு இல்லை.