திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுடன் தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு தேர்தலா?
சென்னை: தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் சேர்த்து ஒரே நாளில் வாக்குப்பதிவு நடத்த வாய்ப்புள்ளதை மறுக்க முடியாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் பெருமளவு பணப்பட்டுவாடா நடைபெற்றதாக கூறி அந்த தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது. பின்னர் தேர்தலை ரத்து செய்துவிட்டது.

இதனிடையே, திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ சீனிவேல் உடல் நலக்குறைவு காரணமாக காலமானதால், அந்த தொகுதியில் அடுத்த 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும்.
இந்நிலையில், தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் சேர்த்து ஒரே நாளில் வாக்குப்பதிவு நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிருபர்களை இன்று லக்கானி சந்தித்தபோது இக்கேள்வி எழுப்பப்பட்டது. சாத்தியம் இருப்பதை மறுக்க முடியாது அவர் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்ட சீனிவேல் உயிரிழந்தது தொடர்பான தகவல் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பதவி காலியாக உள்ளதாக சட்டப்பேரவை செயலர் அறிவிப்பார். அதன் பின்னர் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தேர்தல் தேதி அறிவிக்கப்படும்.
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவு கணக்கை, வரும் ஜூன் 19ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.
பறிமுதல் செய்யப்பட்ட ரூ.105 கோடியே 2 லட்ச ரூபாயில் 47 கோடியே 44 லட்ச ரூபாய் திருப்பித் தரப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications