பாஜக மாநில நிர்வாகி சிவந்தி நாராயணன் கோவில்பட்டி வீட்டில் அமலாக்கப் பிரிவு அதிரடி ரெய்டு!
கோவில்பட்டி: தமிழ்நாடு பாஜகவின் மாநில பட்டியல் அணி பிரிவு பொதுச்செயலாளர் சிவந்தி நாராயணன் வீட்டில் இன்று அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் திடீரென சோதனை நடத்திய்து பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்திய விசாரணை ஏஜென்சிகளான அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை, சிபிஐ உள்ளிட்டவற்றை தங்களை பழிவாங்க மத்திய பாஜக அரசு பயன்படுத்துகிறது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளன. மேலும் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் சில, சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்கவும் மறுத்து வருகின்றன. தேசிய அளவிலான மிகப் பெரிய பிரச்சனையாக இந்த விவகாரம் பேசப்பட்டும் வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, தமிழ்நாட்டின் கோவில்பட்டியில் இன்று பாஜகவின் மாநில நிர்வாகி வீட்டிலேயே அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு பாஜகவில் மாநில பட்டியல் அணி பிரிவின் பொதுச் செயலாளராக இருபப்வர் சிவந்தி நாராயணன்.
பாஜக மாநில நிர்வாகியான சிவந்தி நாராயணன் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல தொழில்களை செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் அரசு கட்டிடங்களை கட்டும் ஒப்பந்ததாரராகவும் அவர் பணிகளை செய்து வந்தார். இந்த நிலையில்தான் இன்று காலை திடீரென மதுரையில் இருந்து வந்த 3 அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், சிவந்தி நாராயணன் வீட்டில் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர்.
பாஜகவின் மாநில நிர்வாகி வீட்டில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளே சோதனை நடத்தியதால் கோவில்பட்டி பாஜகவினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து சிவந்தி நாராயணன் வீடு முன்பாக சில பாஜகவினர் திரண்டனர். அவர்கள் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளிடம் விவரங்கள் கேட்டனர். ஆனால் எதற்காக இந்த சோதனை நடத்தப்படுகிறது என்பதை அதிகாரிகள் தெரிவிக்க முடியாது என மறுத்துவிட்டனர். இதனால் என்ன செய்வது என தெரியாமல் பாஜகவினர் அங்கேயே முகாமிட்டிருந்தனர்.
இந்த சோதனைகளின் போது சிவந்தி நாராயணன் வீட்டில் இல்லை. அவரது மனைவியிடம் சொத்து, முதலீடு உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு கேள்விகளையும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கிடுக்குப்பிடியாக விசாரித்தனர்.