கட்சியை யாரும் கைப்பற்ற முடியாது.. ஓ.பி.எஸ்சுக்கு எடப்பாடி பழனிச்சாமி மறைமுக எச்சரிக்கை
ஆட்சியையும், கட்சியையும் யாரும் கைப்பற்ற முடியாது என கூறியுள்ளதன் மூலம், ஓ.பி.எஸ் அணிக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார் முதல்வர்.
சென்னை: 90 சதவீதம் நிர்வாகிகள் தங்கள் அணியில் இருப்பதாகவும் எனவே, ஆட்சியையும், கட்சியையும் வேறு யாரும் கைப்பற்ற முடியாது என்றும், சேலத்தில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
சேலத்தில் நடந்த நிர்வாகிகள் அதிமுக (அம்மா) கட்சி ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். கூட்டத்தினரிடையே அவர் பேசியதாவது:
எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்த காலத்தில் கூட அதிமுகவுக்கு பல்வேறு சோதனைகள் வந்தன. ஆனால் அந்த சோதனைகளை தொண்டர்கள் தவிடுபொடியாக்கினர். இப்படி உருவாகிய இயக்கம்தான் அதிமுக இயக்கம். தற்போது சில சந்தர்ப்பவாதிகள் அதிமுகவை முடக்க நினைக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது.
90 சதவீத நிர்வாகிகள்
அதிமுக ஆட்சியை எப்படியாவது கலைத்து விட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பல்வேறு வகையில் திட்டம் போட்டார். ஆனால், அவரது பகல் கனவு பலிக்கவில்லை. கட்சியும், ஆட்சியும் நம்மிடத்தில் தான் உள்ளது. 90 சதவீத நிர்வாகிகள் நம்மிடம் இருப்பதால் இந்த ஆட்சியையும், கட்சியையும் வேறு யாரும் கைப்பற்ற முடியாது. 48 மாவட்ட செயலாளர்களில் 26 பேர் நமது அணியில் இருக்கிறார்கள். அதேபோல் 123 எம்.எல்.ஏ.க்களும், 37 எம்.பி.க்களில் 29 எம்.பி.க்களும் நமது அணியில்தான் இருக்கின்றனர்.
பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தேன்
கட்சியின் நலன் கருதி இரண்டு அணிகளும் ஒன்றாக சேர்ந்தால் நல்லது என்று லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார். அதே கருத்தை அமைச்சர்களும் தெரிவித்தார்கள். எனவே, கட்சி சிதைந்து விடக்கூடாது என்பதற்காக இரண்டு அணிகளும் இணைவதற்கு பேச்சுவார்த்தை நடத்த நான் சம்மதம் தெரிவித்தேன்.
பல கோப்புகளில் கையெழுத்து
தமிழகத்தில் அரசு செயல்படவில்லை, இது பினாமி அரசு என்றெல்லாம் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். ஆனால் நாங்கள் மக்களை பற்றி சிந்திக்கிறோம். இதுவரை இல்லாத வகையில் நான் வேகமாக கோப்புகளை நகர்த்தி வருகிறேன். நான் முதல்வராக பொறுப்பேற்று 73 நாட்களில் 1,570 கோப்புகளில் கையெழுத்து போட்டு அனைத்து துறை பணிகளையும் முடுக்கி விட்டுள்ளேன். தமிழக அரசு தற்போது சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது.
குடிநீர் பஞ்சம் போக்க நடவடிக்கை
தமிழகத்தில் 140 ஆண்டுகள் இல்லாத வகையில் தற்போது கடும் வறட்சி நிலவுகிறது. மேட்டூர் அணையில் தற்போது தண்ணீர் வற்றி போய்விட்டது. ஆனால், தமிழகத்தில் வறட்சி நிலவினாலும் பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு தேவையான நிவாரணத் தொகைகள் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. டெல்லிக்கு நான் சென்றபோது, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து விவசாயிகளின் பிரச்சினைகளை பற்றி எடுத்துக்கூறினேன். அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இவ்வாறு பேசினார். ஆட்சியையும், கட்சியையும் யாரும் கைப்பற்ற முடியாது என கூறியுள்ளதன் மூலம், ஓ.பி.எஸ் அணிக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார் முதல்வர் என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.