கோர்ட்டில் தினகரன் தரப்புக்கு எதிராக எடப்பாடி தரப்பு வீச ரெடியாக இருக்கும் ஜக்கையன் அஸ்திரம்
கோர்ட்டில் தேவைப்பட்டால் தினகரன் தரப்பை அதிர வைக்கும் 'ஜக்கையன் கடிதத்தை' தாக்கல் செய்ய உள்ளதாம் எடப்பாடி தரப்பு.
சென்னை: எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் நெருக்கடி ஏற்படும் நிலை வந்தால் தினகரன் தரப்புக்கு எதிராக 'ஜக்கையன் கடிதம்' எனும் அஸ்திரத்தை ஏவ திட்டமிட்டுள்ளதாம் ஆளும் தரப்பு.
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம், பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரும் வழக்கு ஆகியவை நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த விசாரணையில் தங்களுக்கு சாதகமாகவே முடிவு கிடைக்கும் என நம்பிக்கையோடு இருக்கிறது ஆளும் தரப்பு.
இது தொடர்பாக நேற்று இரவு முதல் விடிய விடிய பல்வேறு தரப்புடனுடன் ஆளும் தரப்பு ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையில் மிக முக்கியமாக ஜக்கையன் அஸ்திரம் குறித்து நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டிருக்கிறது.
தினகரன் அணியில் இருந்து தாவி வந்த ஜக்கையனிடம் ஒரு எழுத்துப்பூர்வ கடிதம் ஒன்று வாங்கி வைக்கப்பட்டுள்ளதாம். அந்த கடிதத்தில், திமுகவுடன் இணைந்து தினகரன் தரப்பு அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்ததாகவும் அதற்கு தம்மையும் ஒரு கருவியாக பயன்படுத்த முயற்சித்தனர்; இதற்காக தாம் அடைத்து வைக்கப்பட்டிருந்தேன் என்கிற ரீதியில் இருக்கிறதாம் அக்கடிதம்.