பெரும்பான்மைக்கான 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கிடைத்துவிடுமா? திக் திக் எடப்பாடி பழனிச்சாமி
சட்டபையில் பெரும்பான்மைக்கான 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கிடைத்துவிடுமா? அரசு கவிழுமா? என்ற பதற்றத்தில் இருக்கிறது சசி கோஷ்டி.
சென்னை: அதிமுக இரண்டாக உடைந்துள்ள நிலையில் தமக்கு பெரும்பான்மைக்கான 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கிடைத்துவிடுமா என்ற தவிப்பில் இருந்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
தமிழக சட்டசபையில் மொத்தம் 234 எம்.எல்.ஏக்கள். இதில் சபாநாயகர், நியமன உறுப்பினர்கள் தவிர்த்து மொத்தம் 232.
ஜெயலலிதா மறைவால் தற்போது மொத்தம் எம்.எல்.ஏக்கள் 231 மட்டுமே உள்ளனர். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை.
124 எம்.எல்.ஏக்கள்
எடப்பாடி பழனிச்சாமி தமக்கு 124 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக ஆளுநரிடம் பட்டியல் கொடுத்திருந்தார். இதனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர்.
122 ஆக குறைவு
இதையடுத்து இன்று சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார். இந்த நிலையில் 124 எம்.எல்.ஏக்களில் நேற்று மயிலாப்பூர் நடராஜ் இன்று கோவை வடக்கு அருண்குமார் ஆகியோர் எடப்பாடிக்கு எதிர்ப்பு என அறிவித்துவிட்டனர்.
மேலும் 10 பேர் எஸ்கேப்?
இதனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு 122 எம்.எல்.ஏக்கள் மட்டுமே தற்போது ஆதரவு உள்ளது. இருப்பினும் இவர்களில் குறைந்தது 10 பேர் ஓபிஎஸ் அணிக்கு போகக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மை கிடைக்காமல் அரசு கவிழும் நிலை ஏற்படும்.
சபாநாயகர் வாக்கு
சபாநாயகரைப் பொறுத்தவரையில் தேவைப்பட்டால் வாக்களிப்பார். நியமன எம்.எல்.ஏக்கு வாக்குரிமை கிடையாது என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
கருணாநிதி
திமுகவைப் பொறுத்தவரையில் அக்கட்சி தலைவர் கருணாநிதி சட்டசபைக்கு வர இயலாது. ஆகையால் எஞ்சிய 88 எம்.எல்.ஏக்களும் எடப்பாடிக்கு எதிராக வாக்களிப்பர். இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 1 எம்.எல்.ஏ. மற்றும் காங்கிரஸின் 8 எம்.எல்.ஏக்களும் எடப்பாடிக்கு எதிராக வாக்களிக்க உள்ளனர்.
108 வாக்குகள்
தற்போதைய நிலையில் திமுக, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ் கட்சிகளின் 97 வாக்குகள், ஓபிஎஸ் அணியின் 11 வாக்குகள் என மொத்தம் 108 வாக்குகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக விழுவது உறுதியாகி உள்ளது. எதிர்பார்த்தபடியே 117 எம்.எல்.ஏக்கள் கிடைத்துவிடுமா? அரசு கவிழுமா என்பது இன்னும் சில மணிநேரத்தில் தெரிந்துவிடும்.