ஓபிஎஸ்ஸுக்கு சசி தரப்போகும் 'ஷாக்'!ஜெயக்குமாரை தூக்கிவிட்டு நிதி அமைச்சராகும் தங்க தமிழ்ச்செல்வன்
ஓபிஎஸ் அமர்ந்த நிதி அமைச்சர் இருக்கையில் அவரது சொந்த மாவட்டத்தைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வனை அமரவைத்து அதிர்ச்சி வைத்தியம் தர இருக்கிறது சசிகலா கோஷ்டி.
சென்னை: போர்க்கோடி தூக்கிவரும் அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி தந்துவிடுமாறு சசிகலா பரிந்துரைத்திருக்கிறாராம். இதனால் அமைச்சர் ஜெயக்குமார் வசம் உள்ள நிதித்துறை பறிபோகும் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.
எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கு முடிவு கட்டுதைப் பற்றி ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்கள் அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏக்கள். ஆனால் எடப்பாடிக்கு எதிராக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கூட்டம் கூடுவதை உற்சாகத்தோடு கவனித்து வருகிறார் ஓ.பி.எஸ்.

ஓபிஎஸ் கோஷ்டி
அதிருப்தி அணி எம்.எல்.ஏக்களைத் தொடர்பு கொண்டும் ஓபிஎஸ் கோஷ்டி பேசி வருகிறது. இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் திகார் சிறையில் தினகரன் அடைக்கப்பட்ட நாளில் இருந்து, ஆட்சியும் கட்சியும் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது? என்ற கேள்விக்கு விடை தெரியாமல் தவித்து வருகின்றனர் அ.தி.மு.க தொண்டர்கள்.

அமைச்சர் பதவி ஆசை
இதனிடையே அமைச்சர்களாக இருந்தவர்கள் பலரும் தற்போது மீண்டும் அமைச்சராக வேண்டும் என விரும்புகிறார்கள். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, அம்மா வெளியில் வந்ததும் பதவி தேடி வரும் என சசிகலாவும் சிலருக்கு உறுதி கொடுத்திருக்கிறார்.

உறுதி தந்ததால் ஆதரவு
ஜெயலலிதா இறந்த பிறகு சசிகலா பதவிக்கு வந்தால் நாமும் அமைச்சர் ஆவோர் என கனவு கண்டு கூவத்தூரில் டேரா போட்டவர்களும் உண்டு. இப்போது சசிகலாவும் சிறைக்குச் சென்ற நிலையில் எடப்பாடி அரசாங்கத்தில் அமைச்சர் பதவி உண்டு எனவும் உறுதியளிக்கப்பட்டது.

சசிகலாவின் புகார்
ஆனால் நாட்கள் உருண்டோடினவே தவிர அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை. இதனால் இனியும் பொறுத்திருக்க முடியாது என பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்து இதுதான் நடக்கிறது என எம்.எல்.ஏக்கள் வெற்றிவேல் மற்றும் தங்க.தமிழ்ச் செல்வன் விவரித்துள்ளனர்.

யார் யாருக்கு பதவி?
இதையடுத்து அமைச்சரவையில் கட்டாயம் மாற்றம் தந்தாக வேண்டும் என நெருக்கடி கொடுத்திருக்கிறார் சசிகலா. இதனால் வேறுவழியே இல்லாமல் தென்காசி எம்.எல்.ஏ செல்வமோகன் தாஸ் பாண்டியன் அல்லது ராதாபுரம் இன்பதுரை ஆகியோரில் ஒருவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கலாம். அதேபோல் ஓபிஎஸ்-க்கு எதிராக சொந்த மாவட்டத்திலேயே வரிந்துகட்டிக் கொண்டு செயல்படுகிறார் மாவட்ட செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன். ஓபிஎஸ்-ன் நிதி அமைச்சர் பதவியில் அமர்ந்தாக வேண்டும் என வேட்கையுடன் இருக்கிறார் அவர். ஓபிஎஸ்-க்கு பதிலடி தரும் வகையில் தங்க தமிழ்ச்செல்வனுக்கு நிதி அமைச்சர் பதவி தரப்படும் எனவும் கூறப்படுகிறத்.












Click it and Unblock the Notifications