நீங்க கூண்டோடு ராஜினாமா செய்யுங்க- நாங்க கெத்தா இடைத்தேர்தலை சந்திப்போம்- திமுகவுக்கு 'செக்'
திமுக எம்.எல்.ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்தால் இடைத் தேர்தலை எதிர்கொள்வது என எடப்பாடி தரப்பு முடிவு செய்துள்ளது.
சென்னை: திமுக எம்.எல்.ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்தால் அத்தனை தொகுதிகளிலும் இடைத்தேர்தலை எதிர்கொள்வோம் என முதல்வர் எடப்பாடியார் அமைச்சர்களிடம் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
18 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கை எதிர்கொள்வது தொடர்பாக விடிய விடிய முதல்வர் எடப்பாடியார் தரப்பில் பல்வேறு தரப்புடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடியார் ஆலோசனை நடத்தினார்.
எக்ஸ்ட்ரீம் போகமட்டார் ஸ்டாலின்
இந்த ஆலோசனையின் போது திமுக எம்.எல்.ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்தால் அதை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியோ, நிச்சயம் ஸ்டாலின் அப்படி ஒரு எக்ஸ்ட்ரீம் எல்லைக்கு போகமாட்டார் என உறுதியாக கூறியுள்ளார்.
நெருக்கடி இல்லை
அத்துடன் ஒருவேளை திமுக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்தாலும் அரசுக்கு எந்த பாதிப்பும் வராது. எந்த நெருக்கடியும் ஏற்படாது எனவும் சுட்டிக்காட்டியிருக்கிறார் எடப்பாடியார்.
இடைத்தேர்தலை சந்திப்போம்
மேலும் ஏற்கனவே காலியாக இருக்கும் 19 தொகுதிகளுடன் சேர்த்து இந்த 98-க்கும் இடைத் தேர்தல் நடத்திவிட்டு போவோம் எனவும் திடமான நம்பிக்கையுடன் கூறினாராம் முதல்வர் எடப்பாடியார். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு எப்படியும் தங்களுக்கு சாதகமாக இருக்கும்; தினகரன் தரப்பு உச்சநீதிமன்றம் சென்றாலும் அந்த தீர்ப்பு வர மாதங்கள் உருண்டோடும் என்றும் பெரும் நம்பிக்கையுடன் இருக்கிறதாம் எடப்பாடியார் தரப்பு.
வேண்டாமே ராஜினாமா
இது தொடர்பாக திமுக தரப்பிலும் விவாதிக்கப்பட்டு வருகிறதாம். கூண்டோடு ராஜினாமா செய்தால் நிச்சயம் தங்களுக்கு சாதகமாக இருக்காது என்றே பலரும் கூறி வருகிறார்களாம்.