திமுகவோடு எடப்பாடி கூட்டணி பேசினார்.. நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை.. போட்டுடைத்த சிவி சண்முகம்!
சென்னை: திமுகவோடு பழனிசாமி கூட்டணி பேசினார்.... நாங்கள் எதிர்த்த திமுக ஆதரவோடு பழனிசாமி முதல்வராக தேர்வு செய்யப்படவிருப்பதாக கூறினார்: அதற்கு யாரும் சம்மதிக்கவில்லை; ஏற்றுக்கொள்ளவில்லை; நாங்கள் பேரதிர்ச்சிக்குள்ளானோம் என்று சி.வி.சண்முகம், பேசி உள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் செய்தியாளர் சந்திப்பு நடத்தி வருகிறார். அதில், விஜய் ஆட்சி அமைக்க வேண்டுமென மக்கள் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளனர். திமுக ஆதரவோடு ஆட்சி அமைக்க எடப்பாடி திட்டமிட்டார். அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களும் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதிமுக என்ற கட்சியே திமுக எதிர்ப்பில் பிறந்தது. நாம் திமுகவை கடுமையாக எதிர்த்த கட்சி.
நாம் எப்படி திமுக உடன் கூட்டணி வைக்க முடியும். திமுக நம்முடைய கொள்கை ரீதியிலான எதிர்க்கட்சி. அப்படி இருக்க அவர்களுடன் எப்படி இணைய முடியும். அப்படி இருக்க அவர் திமுக உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று கூறினார். ஈபிஎஸ் முடிவை கேட்டு அதிமுக எம்எல்ஏக்கள் அதிர்ச்சி அடைந்தோம். அதிமுக கூட்டணி தோல்வி அடைந்தது என்பதை ஒப்புக்கொள்கிறோம் . தவெக ஆட்சியை ஆதரிப்பது என அதிமுக எம்எல்ஏக்கள் முடிவெடுத்துள்ளோம்.

அதிமுக சட்டமன்ற குழு உறுப்பினராக எஸ்பி வேலுமணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தவெகவுக்கு எஸ்பி வேலுமணி தரப்பு ஆதரவு அளிக்கும். தவெகவுக்கு மக்கள் கொடுத்த தீர்ப்பை நாங்கள் ஏற்கிறோம் என்று சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் கிளர்ச்சி
முன்னதாக அதிமுகவில் தனக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி கோஷ்டிகளுக்கு செக் வைக்கும் வகையில், தனது அணியில் 17 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தினார் எடப்பாடி.
இது, கிளர்ச்சி கோஷ்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், எடப்பாடியை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கி, வேலுமணியை பொதுச்செயலாளராக கொண்டுவர சி.வி.சண்முகம் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தாவியிருக்கிறார். இதற்காக, பெரும்பாலான மா.செ. க்களிடம் கையெழுத்து பெற்றுள்ளார் சண்முகம்.
முன்னதாக அதிமுகவில் உள்ள 47 எம்.எல்.ஏ.க்களில் 35 எம்.எல்.ஏ.க்கள் சண்முகம்-வேலுமணி எடுக்கும் முயற்சிக்கு ஒத்துழைத்தனர். எடப்பாடி பக்கம் அவர் உட்பட 12 எம்.எல்.ஏ.க்கள் தான் இருந்தனர். இந்த 35 எம்.எல்.ஏ.க்களை வைத்து தவெகவுடன் கூட்டணி ஆதரவு பேச்சுவார்த்தை தொடங்கியது சண்முகம் - வேலுமணி அண்ட் கோ ! கட்சி தாவல் தடை சட்டம் பாயாமல் இருக்க வேண்டுமானால் 32 பேர் ஒரு அணியில் இருக்க வேண்டும். தங்களிடம் 35 பேர் இருப்பதால் துணிச்சலாக தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
இந்த நிலையில் தான், அந்த துணிச்சலை உடைக்க சண்முகம்-வேலுமணி தரப்பில் இருந்த 5 எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டார் எடப்பாடி. இதற்கு பின்னணியில் பல காரணங்கள் இருக்கிறது. அந்த 17 பேரின் ஆதரவு தமக்கு இருப்பதை முதல்வர் விஜய்க்கும், எதிர் கோஷ்டிக்கும் அம்பலப்படுத்தத்தான் சட்டமன்ற பேரவை செயலாளரை சந்தித்து எடப்பாடி தரப்பினர் மனு அளித்தனர். அதாவது, சட்டமன்ற அதிமுக தலைவராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்திருக்கிறோம் ; அதை ஏற்க வேண்டும் என மனு கொடுக்கப்பட்டது.
எடப்பாடியின் இந்த மூவ் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கு போட்டியாக தங்கள் அணியில் 30 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்க வேலுமணியை சட்டமன்ற அதிமுகவின் தலைவராக தேர்வு செய்து சபாநாயகரிடம் சண்முகம் தரப்பு. மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications