யார் யாரை கவிழ்ப்பது? எடப்பாடி- செங்கோட்டையன் இடையே மும்முர மல்லுக்கட்டு?
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் இடையேயான மல்லுக்கட்டு மும்முரமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: ஒரே கட்சியில் இருந்தாலும் எதிரும் புதிருமாக இருந்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் அமைச்சர் செங்கோட்டையனும் மாறி மாறி குழிபறிக்க தொடங்கியிருப்பது கோட்டை வட்டாரங்களில் சலசலப்பை கிளப்பியுள்ளது.
கொங்கு மண்டலத்தில் முத்துசாமி, செங்கோட்டையன், ஆகியோர் அதிமுகவின் ஜாம்பவான்களாக வலம் வந்தவர்கள். காலப்போக்கில் முத்துசாமி அதிமுகவை விட்டு வெளியேறி திமுகவில் ஐக்கியமானார்.
இதனால் அப்பகுதியில் செங்கோட்டையன் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்தார். அப்போது அவரது ஆதரவில் அரசியலில் ஏறுமுகம் பெற்றவர் எடப்பாடி பழனிச்சாமி.
வனவாசத்தில்...
பின்னர் சசிகலாவின் நம்பிக்கையை பெற்று செங்கோட்டையனையே வனவாசம் போக வைத்துவிட்டார் எடப்பாடியார். செங்கோட்டையன் மீதான ஏடாகூடா புகார்களும் வலுவாக இருந்ததால் ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை பதவி எதுவும் இல்லாமல் பவ்யமாக பதுங்கியே இருந்தார்.
அவைத்தலைவர்
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் செங்கோட்டையன் கலகக் குரல் எழுப்பிவிடக் கூடாது என்பதறாக அவருக்கு சசிகலா முக்கியத்துவம் கொடுக்க தொடங்கினார். இந்த முக்கியத்துவம் அதிமுக அவைத் தலைவர் பதவியில் இருந்து முதல்வர் பதவிக்கான வேட்பாளர் வரை விஸ்வரூபமெடுத்தது.
செங்கோட்டையனுக்கு எதிர்ப்பு
இதை சற்றும் எதிர்பாராத எடப்பாடியார், கூவத்தூர் ரிசார்ட்டில் செங்கோட்டையனை முதல்வராக்க எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் சசிகலா எடப்பாடி பழனிச்சாமியையே முதல்வராக தேர்வு செய்ய வைத்தார்.
அமைச்சரவையில் 3-வது இடம்
அத்துடன் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையில் செங்கோட்டையனுக்கு பள்ளி கல்வித்துறையை கொடுத்தார். இதனால் அமைச்சரவையில் 3-வது இடத்துக்கு முன்னேறினார் செங்கோட்டையன்.
ஜெயக்குமாருக்கு நிதி
இதற்கு செக் வைக்கும் வகையில்தான் வலுவான நிதித்துறை அமைச்சர் பொறுப்பை அமைச்சரவையில் 7-வது இடத்தில் இருக்கும் ஜெயக்குமாருக்கு கொடுத்தாராம் எடப்பாடியார். இது செங்கோட்டையன் தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்க இதற்கு பதிலடி எப்படி தருவது என ஆலோசித்து வருகிறதாம். அமைச்சரவைக்குள்ளேயே நடக்கும் இந்த மல்லுக்கட்டு எப்போது வெடிக்குமோ என அதிகாரிகள் கதிகலங்கிப் போய் உள்ளனர் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.