அடுத்தடுத்து நீக்கம்.. எடப்பாடி பழனிசாமியின் அதிரடி ஆக்ஷன்.. இரண்டாக உடையும் அதிமுக?
சென்னை: அதிமுக இரண்டாக உடைந்துள்ள சூழலில், எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்து அதிரடி ஆக்ஷனில் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே 26 மாவட்டச் செயலாளர்களை பதவி நீக்கம் செய்த எடப்பாடி பழனிசாமி, இன்று மேலும் 2 மாவட்டச் செயலாளர்களை பதவியில் இருந்து நீக்கியுள்ளார். இதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
சட்டசபைத் தேர்தலில் அதிமுக அடைந்த தோல்விக்கு பின், அந்த கட்சியில் பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனை கூட்டத்திலேயே அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் கொந்தளித்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்பி வேலுமணி தலைமையில் 25 எம்எல்ஏ-க்கள் தனி அணியாக உருவாகினர்.

அதுமட்டுமல்லாமல் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவுக்கு எதிராக எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், விஜயபாஸ்கர், காமராஜ் உள்ளிட்ட 25 எம்எல்ஏ-க்கள் தவெக அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்தில் ஆதரவாக வாக்களித்தனர். இது எடப்பாடி பழனிசாமியை அதிர்ச்சி அடைய செய்தது. அதுமட்டுமல்லாமல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை சேர்க்க வேண்டும் என்றும் குரல்கள் எழுந்தன.
இதனால் டென்ஷனான எடப்பாடி பழனிசாமி, தவெக அரசுக்கு ஆதரவு அளித்த விவகாரம் காரணமாக எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்ட 26 மாவடட்ச் செயலாளர்களை பதவியில் இருந்து நீக்கி அறிவிப்பை வெளியிட்டார். அவர்களுக்கு பதிலாக புதிய மாவட்டச் செயலாளர்களையும் நியமனம் செய்து உத்தரவிட்டார்.
ஆனாலும் லால்குடி எம்எல்ஏ லீமா ரோஸை மட்டும் கட்சிப் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கவில்லை. இதற்கான விளக்கம் கூட இதுவரை வெளியிடப்படவில்லை. மறுபக்கம் அதிமுகவில் பல்வேறு மாவட்டங்களிலும் கோஷ்டி பூசல் எழுந்தது. ஆனாலும் தவெக ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து மாறப் போவதில்லை என்று எஸ்பி வேலுமணி தரப்பு கூறி இருக்கிறது.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் அடுத்தடுத்த ஆக்ஷன் தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே 26 மாவட்டச் செயலாளர்களை பதவி நீக்கம் செய்துள்ள எடப்பாடி பழனிசாமி, இன்று 2 மாவட்டச் செயலாளர்களை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதனால் எடப்பாடி பழனிசாமி பதவி நீக்கம் செய்த மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை 28ஆக உயர்ந்துள்ளது.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் பி.கே. வைரமுத்து, தென்காசி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் சி. கிருஷ்ண முரளி ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications