"தனிப்பெரும்பான்மை உடன் தான் தமிழகத்தில் ஆட்சி.." உறுதியாக சொன்ன எடப்பாடி! உற்று பார்த்த தொண்டர்கள்
கள்ளக்குறிச்சி: திமுகவை மிகக் கடுமையாகச் சாடிய எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லாத ஒரு சூழல் இருப்பதாக விமர்சித்தார். மேலும், நடைபெற உள்ள தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாழவந்தான்குப்பம் பகுதியில் அதிமுக சார்பில் மாபெரும் மகளிர் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். திமுகவை கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு மிக மோசமாக இருப்பதாகவும் சாடினார்.

எடப்பாடி பழனிசாமி
அங்கு எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நாங்கள் தான் திறந்து வைத்தோம் என்று கடந்த சில நாட்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலின் பொய் கூறினார். ஆனால், உண்மையில் கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்திற்கு அதிமுக ஆட்சிக் காலத்தில் அடிக்கல் நாட்டினோம். அதிமுக பெற்ற பிள்ளைக்கு ஸ்டாலின் பெயர் வைக்கிறார். இது எந்த விதத்தில் நியாயம்!
அதிமுக ஆட்சிக் காலத்தில் மொத்தம் 73 கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினோம்.. மேலும், பெண்களுக்கு நல்ல நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தார் தான் முதல்வர் ஜெயலலிதா.. ஆனால், இன்று திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லை.. சிறுமி முதல் வயதான பெண்கள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. அனைவரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். எந்தவொரு பெண்ணிற்கும் பாதுகாப்பு இல்லாத சூழலையே திமுக அரசு உருவாக்கியுள்ளது. திமுக ஆட்சியில் பல ஆயிரம் சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சட்டம் ஒழுங்கு
இங்கு தமிழ்நாட்டில் தலையில்லாத முண்டம் போல் சட்டம் ஒழுங்கு சீர் கொட்டு போய் உள்ளது.. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 69 பேர் உயிரிழந்தனர். அதில் உயிரிழந்தோர் குடும்பத்தினரைக் கூட ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறவில்லை. ஆனால், அந்த நேரத்தில் சினிமா பார்த்து கொண்டும், சைக்கிள் ஓட்டிக் கொண்டும் இருந்தவர் தான் ஸ்டாலின்.
திமுக ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று கனிமொழி சொல்லி வந்தார். ஆனால், இன்றைக்கு நிலை என்ன? டாஸ்மாக் கடைகளை மூட திமுக அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுத்தது போலத் தெரியவில்லை. இன்று கஞ்சா போதை கொலை, கொள்ளை செய்திகள் அதிகம் வருகின்றன. தங்கம், வெள்ளி விலையைப் பார்ப்பதை விடக் கொலை, கொள்ளை நிலவரம் என்ன என்பதையே பார்க்கும் நிலை இருக்கிறது.
சாதாரணத் தொண்டன் கூட
அதிமுகவில் சாதாரணத் தொண்டன் கூட அனைத்துப் பொறுப்புகளுக்கும் வர முடியாது.. ஏன் முதல்வராகக் கூட வரலாம். நான் அதிமுகவில் சாதாரணத் தொண்டராக இணைந்தே இப்போது இந்தப் பதவிக்கு வந்திருக்கிறேன். ஆனால் திமுகவில் அவர்களது குடும்ப வாரிசுகள் மட்டும் தான் அனைத்துப் பொறுப்புகளுக்கும் வர முடியும்! மீண்டும் அதிமுக ஆட்சி வந்தால் 100 வேலைத்திட்டம் 150 நாட்களாகக் கொண்டு வருவோம்.
தனிப்பெரும்பான்மை
அதிமுக ஆட்சியில் தான் லேப்டாப் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதை இப்போது தேர்தல் நெருங்குவதால் அவர்களும் தருகிறார்கள். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் சிறப்பானது என ஸ்டாலினே ஏற்றுக் கொண்டு விட்டார். அதைத் தான் இது காட்டுகிறது. தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும். கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆனதும் சரி, இங்கு அரசு மருத்துவமனை கட்டப்பட்டும் சரி அதிமுக ஆட்சியிலேயே நடந்தது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும். அப்போது கள்ளக்குறிச்சிக்கு மேலும் பல முக்கிய திட்டங்கள் கொண்டு வரப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications