எல்லா ஜாதிக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு.. எடப்பாடியாரின் சூப்பர் அஸ்திரம்!
சென்னை: தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் வரும் என்றும், அப்போது பல்வேறு ஜாதியினருக்கும் வாய்ப்பளிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்வராக இருந்த ஓ. பன்னீர் செல்வத்தின் மீது பல புகார்கள் இருந்தாலும் கூட மக்கள் மத்தியில் அவருக்கென்று ஒரு பெயர் உள்ளது. அதை எடப்பாடி தரப்பு உணர்ந்தே உள்ளது. இந்த நிலையில் ஓ.பி.எஸ் பாணியில் தானும் பெயரெடுக்க ஆசைப்படுகிறாராம் எடப்பாடியார்.
இதற்காக திட்டமிட்டு அவர் செயல்பட்டு வருகிறாராம். அதன் ஒரு பகுதிதான், மக்கள் நலத் திட்டங்களை ஊர் ஊராகப் போய் தொடங்கி வைப்பது. இந்த நிலையில் மேலும் சில ஐடியாக்களையும் அவர் களம் இறக்கப் போகிறாராம்.
ஜாதிகளுக்கு முக்கியத்துவம்
தற்போது எடப்பாடியார் தலைமையிலான அமைச்சரவையில் சில ஜாதிகளுக்குத்தான் அதிக பிரதிநிதித்துவம் உள்ளது. இது மற்ற சமூகத்தினர் மத்தியில் பெரும் நெருடலாக உள்ளது. இதை எடப்பாடியாரும் உணர்ந்துள்ளார்.
அமைச்சரவை மாற்றம்
அனைத்து ஜாதியினரையும் தன் பக்கத்தில் அமர வைக்கும் முடிவில் அவர் இருக்கிறார். ஓபிஎஸ் அணியினருடன் நடந்து வரும் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து, அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டால், சில சமூகங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.
சம வாய்ப்பு
இதனால் மேலும் சில ஜாதியினருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கலாமாம். இதன் மூலம் அனைத்து ஜாதியினரையும் அரவணைத்துச் செல்லும் முதல்வர் என்ற பெயர் தனக்குக் கிடைக்கும் என்பது எடப்பாடியாரின் நம்பிக்கையாகும்.
ஓபிஎஸ்ஸை விட ஒரு படி மேலாக
வர்தா புயல், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பன்னீர்செல்வத்துக்குக் கிடைத்த பெயரைவிட, 'நல்ல முதல்வர் எடப்பாடி' எனப் பெயர் எடுக்க வேண்டும் என அவர் ஆசைப்படுகிறாராம். சேலத்தில் நடந்த விழாவிலும், 'கேபிளுக்கு டிஜிட்டல் உரிமம் பெற்றுக் கொடுத்த ஒரே ஆட்சி இதுதான்' என தன்னுடைய ஆட்சிக்கு ஜெயலலிதாவைப் போல, உரிமம் கொண்டாடினார்.
மனக்கோட்டை
அதேசமயம், சேலம் அதிமுகவினர் என்ன சொல்கிறார்கள் என்றால், வேண்டிய அளவுக்கு சொத்துக்களை சேர்த்துவிட்டோம். இனி பொதுவான தலைவராக உருவெடுப்போம் என மனக் கோட்டை கட்டி வருகிறார் எடப்பாடியார் என்கின்றனர் சேலம் அ.தி.மு.கவினர்.