அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு
பொள்ளாச்சி: பெண்களை இழிவாக பேசியதாக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் உள்ளிட்டோரின் உருவபொம்மைகளுக்கு பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே பாவாடையும், செருப்பு மாலைகளும் அணிவிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாகவும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் கூறி தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி சார்பில் கடந்த 17ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் ஆகியோர், தமிழக அரசின் திட்டங்களை விமர்சிக்கும் நோக்கில் பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதாக புகார்கள் எழுந்தன.
அதாவது சி.வி.சண்முகம் பேசுகையில், உங்கள் கனவை சொல்லுங்கள் என முதல்வர் சொல்கிறாரே, எனக்கு நயன்தாரா வேண்டும்னு சொன்னால் நிறைவேற்றி வைப்பாரா? என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு அவர் மன்னிப்பு கேட்டிருந்தார்.
அதிமுக மூத்த தலைவர்களின் பேச்சு தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின், கனிமொழி எம்பி, ஜோதிமணி எம்பி, செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
அது போல் தென்னிந்திய நடிகர் சங்கமும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும் கண்டனத்தை பதிவு செய்திருந்தது. இந்த நிலையில் இன்று காலை பொள்ளாச்சி பேருந்து நிலையம, உடுமலைப்பேட்டை சாலை பகுதிகளில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் மேற்கண்ட 4 பேரின் உருவபொம்மைகள் தொங்கவிடப்பட்டிருந்தன.
இதை யார் வைத்தனர் என்பது தெரியவில்லை. அதில் திண்டுக்கல் சீனிவாசனின் உருவபொம்மைக்கு பாவாடை அணிவித்தும், மற்ற மூவரின் கட் அவுட்களுக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த உருவபொம்மைகளை அகற்றினர். இந்த செயலில் ஈடுபட்டது யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications