ஆர்.கே.நகரில் ஜெ.வை காங். ஆதரிக்க வலியுறுத்திய ப.சி. ஆதரவாளர் கட்சியில் இருந்து டிஸ்மிஸ்!!
சென்னை: ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அண்ணா தி.மு.க. வேட்பாளர் முதல்வர் ஜெயலலிதாவை ஆதரிக்க வேண்டும் என்று பேசியதற்காக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர் கோவை கே.செல்வராஜ் காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பொறுப்பேற்றது முதல் அவரைத் தொடர்ந்து விமர்சித்து வந்தார் கோவை செல்வராஜ். மேலும், தமிழகத்தில் இளங்கோவன் தலைமையில் இருப்பது கருணாநிதி காங்கிரஸ் என்றும் அவர் விமர்சனம் செய்தார்.

இதற்கு இளங்கோவன் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததுடன் செல்வராஜ் பேச்சை ஆதாரத்துடன் டெல்லி மேலிடத்துக்கும் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஆர்.கே. நகரில் அண்ணா தி.மு.க. வேட்பாளர் முதல்வர் ஜெயலலிதாவை காங்கிரஸ் ஆதரிக்க வேண்டும் என்று செல்வராஜ் பேசி வந்தார். இதையடுத்து அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வழிகாட்டுதலுக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு தீர்மானத்துக்கும் விரோதமாகச் செயல்பட்டு வரும் கோவை கே.செல்வராஜ் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்படுகிறார். அவரோடு காங்கிரஸ் கட்சியினர் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
சட்டசபை முன்னாள் உறுப்பினரான செல்வராஜ் காங்கிரஸ் கட்சியின் மாநில சேவாதளத் தலைவராக இருந்து வந்தார். ஆனால் காங்கிரஸில் இருந்து தன்னை நீக்கும் அதிகாரம் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு இல்லை என கோவை செல்வராஜ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications