முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கு- சி.பி.ஐ. விசாரணைக்கு ஸ்டாலின், இளங்கோவன், ராமதாஸ் வலியுறுத்தல்!
சென்னை: வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கை:

திருநெல்வேலி மாவட்ட விவசாய பொறியியல் துறையின் செயற்பொறியாளர் எஸ்.முத்துக்குமார சாமி தற்கொலை செய்யப்பட்ட சோக நிகழ்வு நடை பெற்ற உடனே இது தற்கொலை அல்ல, இதில் விவசாயத்துறை அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி சம்மந்தப்பட்டு இருக்கிறார் என்று முதல் முதலாக குரல் எழுப்பினேன்.
தொடக்கத்தில் ஊடகங்களின் ஆதரவு இல்லாத நிலையில், தொடர்ந்து நீதிக்காக குரல் கொடுத்தேன். முத்துக் குமாரசாமி இறப்பதற்கு முன்பு, அவர் கடந்த 3 மாதங்களில் யார் யாரோடு பேசினார் என்கிற தொலைபேசி, அலைபேசி எண்கள் அடங்கிய பட்டியலை ஆதாரமாக வெளியிட்டேன். இதைத் தொடர்ந்து, மாவட்டச் செயலாளர் பதவி, பிறகு அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. பின்பு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
ஆனால், சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் நீதி கிடைக்காது என்பதால் மத்திய புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். இதை அனைத்து எதிர்கட்சிகளும் ஆதரித்தன. நேற்றிரவு சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டு இருக்கிறார். மத்திய புலனாய்வுத் துறை விசாரணையைத் தவிர்ப்பதற்காக அக்ரி.கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டு இருக்கிறாரோ? என்கிற சந்தேகம் வலுக்கிறது.
அதனால் இந்த வழக்கில் தமிழக அமைச்சரே சம்பந்தப்பட்டிருப்பதால், மத்திய புலனாய்வுத் துறை விசாரித்தால் தான் முத்துக்குமாரசாமியின் தற்கொலைக்கு நீதி கிடைக்கும். ஏனெனில் சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் இறுதியாக குற்றவாகளிகள் தப்பித்து விடுவார்கள் என்கிற அச்சம் எல்லோருக்கும் இருக்கிறது.
எனவே, நான் ஏற்கனவே கோரியிருந்த மத்திய புலனாய்வுத் துறையிடம் வழக்கை ஒப்படைப்பதன் மூலமே குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்.
இவ்வாறு இளங்கோவன் கூறியுள்ளார்.
டாக்டர் ராமதாஸ் அறிக்கை:
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வேளாண்துறை பொறியாளர் முத்துக்குமாரசாமியை தற்கொலைக்கு தூண்டியது தொடர்பான வழக்கில் வேளாண் துறையின் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டிருக்கிறார். இது காலம் கடந்து எடுக்கப்பட்ட கண்துடைப்பு நடவடிக்கை ஆகும்.
இந்த வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டால் ஊழல் மூலம் கிருஷ்ணமூர்த்தி சேர்த்த பணம் யாருக்கெல்லாம் கொடுக்கப்பட்டது என்ற உண்மைகள் எல்லாம் தோண்டி எடுக்கப்படும். இதைத் தடுக்கும் நோக்குடன் தான் இப்போது கிருஷ்ணமூர்த்தி கைது என்ற நாடகம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. இது போதுமானதல்ல.
இவ்வழக்கில் புதைந்து கிடக்கும் அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டு வர சி.பி.ஐ.யால் மட்டுமே முடியும் என்பதால் இவ்வழக்கை அந்த அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட்
மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். தற்கொலை வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி., தமிழக அரசின் கட்டுப்பட்டிலே உள்ளது.
எனவே வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
தி.மு.க.
தி.மு.க. எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து இருக்கலாம், ஆனால் சி.பி.ஐ. விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளியே வரும் என்று கூறியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் அறிக்கை:
வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டிருப்பது கண்துடைப்பு மற்றும் உண்மையை மறைக்க நடக்கும் முயற்சி.
இவ்விவகாரம் குறித்து சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்றில், "அம்மாவுக்கு அனைத்தும் தெரியும்" என்று முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேட்டியளித்திருந்தார்.

மாநில அரசு நிர்வாகத்தையே வழிநடத்தும் ஒருவருக்கு இந்த குற்றம் பற்றிய விவரங்கள் அனைத்தும் தெரியும் என்ற நிலையில், மாநில காவல்துறை எப்படி இதில் நியாயமான, நேர்மையான விசாரணையை நடத்த முடியும்?
ஆகவே, நேர்மையான அதிகாரியின் உயிர் பறித்த இந்த ஊழலில் தொடர்புடையை அனைவரையும் சட்டத்தின் முன்பு நிறுத்துவதற்கு ஏதுவாக முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று தி.மு.க.வின் சார்பில் கோரிக்கை வைக்கிறேன்
இவ்வாறு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications