வாங்க ரவுடிகளா.. எலெக்ஷன் முடியற வைக்கும் 'வெளில' இருக்கலாம்!- சென்னை போலீஸின் 'அழைப்பு'!
சென்னை: மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தேர்தல் முடிந்த 6 மாதங்கள் வரை சென்னையில் உள்ள 100 ரவுடிகளை நகரை விட்டு வெளியேற்ற போலீசார் முடிவு செய்துள்ளனர்.
தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க தமிழகம் முழுவதும் போலீசார் பல்வேறு டவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் தலைமறைவு குற்றவாளிகளின் பட்டியலை சேகரிக்குமாறு காவல்துறை இயக்குநர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் மட்டும் கடந்த வாரம் தொடர்ச்சியாக அரசியல் பிரமுகர்கள் 3 பேர் படுகொலை செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.

தேர்தல் நேரத்தில்...
அ.தி.மு.க. பிரமுகர்களான ஆறுமுகம் (தேனாம்பேட்டை), மோசஸ் (ராயப்பேட்டை) ஆகியோர் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் திருவான்மியூரில் தி.மு.க. பிரமுகரான கந்தனும் கொல்லப்பட்டார்.
இதுபோன்ற அசம்பாவிதங்கள் தேர்தல் நேரத்தில் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் சென்னையில் எந்த ரவுடிகள் நடமாட்டமும் இருக்கக் கூடாது என்பதில் உயர் போலீஸ் அதிகாரிகள் உறுதி கொண்டுள்ளனர்.

புதிய வியூகங்களை வகுத்து...
இதைத் தொடர்ந்து சென்னையில் தலைமறைவாக இருக்கும் ரவுடிகளைக் கட்டுப்படுத்த போலீசார் புதிய வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறார்கள்.
இது தொடர்பாக ஒவ்வொரு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கும், தனிப்படை போலீசாருக்கும் 3 விதமான கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

கைது செய்ய முடியாத பட்சத்தில்
இதன்படி, சென்னையில் தறைமறைவாக இருக்கும் ரவுடிகளை வேட்டையாடி கைது செய்து சிறையில் தள்ள வேண்டும். இல்லையென்றால் சரண் அடையச் செய்ய வேண்டும். இந்த இரண்டும் நடக்காத பட்சத்தில் சம்பந்தப்பட்ட ரவுடிகளை சென்னையை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தபட்டுள்ளது (கைது பண்ணாம எப்படி வெளியேற்றுவார்கள்... அன்பாக வேண்டுகோள் விடுப்பார்களோ!!).
தங்களது பகுதியில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் ரவுடிகளை இப்படி வெளியேற்றுவதற்கு சென்னை மாநகர துணை கமிஷனர்களுக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது. கடந்த வாரம் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ரவுடி ஒருவனை இந்த பாணியில்தான் வெளியேற்றியுள்ளார் அப்பகுதி துணைக் கமிஷனர்!

இன்னும் 100 ரவுடிகளை...
இவனைப்போல இன்னும் 100 ரவுடிகளை சென்னையை விட்டு வெளியேற்ற போலீசார் திட்டமிட்டுள்ளார்களாம். அனைத்து உதவி, துணை, இணை கமிஷனர்களுக்கும் இதுகுறித்த வாய்மொழி ஆணைகள் தரப்பட்டுள்ளன. சூழலைப் பொறுத்து இதில் உகந்த முடிவை இந்த அதிகாரிகளே எடுத்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்ல நோட்டீஸ்
சரி, இந்த வெளியேற்ற நடவடிக்கையே புதுசா இருக்கே... எப்படி வெளியேறச் செய்வீங்க? என்று உதவி கமிஷனர் ஒருவரிடம் கேட்டபோது, "சம்பந்தப்பட்ட ரவுடிக்கு முதலில் நோட்டீஸ் அனுப்பப்படும். இதற்கு வக்கீல் மூலமாக அந்த ரவுடி எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க வேண்டும்.
இதில் திருப்தி இல்லாத பட்சத்தில், சம்பந்தப்பட்ட துணை கமிஷனர் 6 மாதத்துக்கு சம்பந்தப்பட்ட ரவுடி சென்னைக்குள் நுழைய தடை விதித்துவிடுவார்,' என்றார்.

சரி, வேறு ஊர்களில் ரவுடி தன் தொழிலைத் தொடர்ந்தால்?....
அதை அந்தப் பகுதி போலீசார் கட்டுப்படுத்துவார். அல்லது ரவுடி வெளிமாநிலத்துக்கு அனுப்பப்படுவார். வெளி மாநிலங்களில் இதே ரவுடியால் குற்றச் செயல் தொடரலாமா? .அதை அந்த மாநில போலீசார் பார்த்துக் கொள்வார்கள்.

அவர்களை பிடித்து உள்ளே வைக்கலாமே?....
இதைவிட அவர்களை பிடித்து தேர்தல் வரை உள்ளே வைக்கலாமே?
அது எங்களுக்குத் தெரியாததல்ல.. ஆனால் ரவுடிகளை வெளியேற வைக்க வேண்டும் என்பது மேலிடத்தில் எடுத்த முடிவு. அவர்களை கைது செய்வது குறித்து மேலிடம்தான் முடிவு செய்ய வேண்டும்.
தேர்தல் முடிந்ததும் சென்னைக்கு திரும்ப ரவுடிகளுக்கு அழைப்பு உண்டா.. அவர்களாகவே புரிந்து கொண்டு வந்துவிடுவார்களா.. இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல அவர் விரும்பவில்லை.
-இதெல்லாம் ஏதோ காமெடி டயலாக்னு நினைச்சிடாதீங்க... நிஜமாகவே நமக்குத் தெரிந்த ஒரு உதவிக் கமிஷனரிடம் பேசியதிலிருந்து...












Click it and Unblock the Notifications