கொள்ளை பணத்தை கிள்ளி கொடுக்கும் அமைச்சர்கள்.. ஆர்.கே.நகர் விதிமீறல் பற்றி ஈவிகேஎஸ்!
சென்னை: கொள்ளையடித்த பணத்தில் சிறு பகுதியை வாக்காளர்களுக்கு கொடுத்து வாக்குவாங்கும் நடவடிக்கையில் ஆர்.கே.நகரில் அமைச்சர்கள் இறங்கியுள்ளதாக தமிழ்நாடு, காங்கிரஸ் கட்சி தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஒரு வருட காலமாக தமிழகத்தில் ஆட்சி நடைபெறுவதற்கான எந்த அறிகுறிகளும் தெரியாத நிலை இருந்து வருகிறது. ஏழு மாத பொம்மை முதல்வர் ஆட்சிக்கு பிறகு ஜெயலலிதா பொறுப்பேற்று இந்நாள் வரை அமைச்சரவை கூட்டம் ஒருமுறை கூட நடத்தப்படாத நிலையில்தான் தற்போது ஆட்சி நடந்து வருகிறது.

காணொளி காட்சி மூலம் திறப்பு விழாக்கள், அறிவிப்புகளை தவிர உருப்படியான ஆட்சி நடைபெறுகிறதா? என்ற மிகப்பெரிய கேள்வி இன்று எழுந்துள்ளது.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சிகள் போட்டியிதா நிலையிலும், ஆலும் கட்சியின் அராஜகத்திற்கும், தில்லுமுல்லுகளுக்கும் தேர்தல் ஆணையம் துணிந்து துணை போய்க் கொண்டு இருக்கிறது.
தமிழகத்தில் 28 அமைச்சர்களும் அத்தொகுதியில் முகாமிட்டு கொள்ளையடித்த பெரும் பணத்தின் ஒரு சிறுபகுதியை வாக்காளர்களின் வாக்குகளை பெற பகிரங்கமாக வினியோகம் செய்து வருகிறாரக்ள். இதுபோன்ற ஜனநாயக விரோத செயல்கள், இந்தியாவில் எந்த பகுதியிலும் நடந்திராத அளவுக்கு அதிகார வேட்டை எல்லை மீறி போய்க்கொண்டிருக்கிறது.
தமிழக மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தீர்வதற்கு ஆட்சியில் அமைச்சர்களாக இருப்பவர்கள் தலைமைச் செயலகத்திற்கு வருகை புரிந்து எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை. இதனால் மக்களின் பிரச்சினைகள் மலைபோல குவிந்துள்ளன.
அமைப்பு சாரா தொழிலார்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆலாகிவருகின்றார்கள். இவர்களது வறுமை நிலைமையின் காரணமாக வட்டி மற்றும் அபராத வட்டியை தள்ளுபடி செய்வதோடு அசல் தொகையையும் ரத்து செய்ய வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். ஏழைகளான இவர்கள் கோரிக்கையை செவிமடுக்க ஆட்சியாளர்கள் தயாராக இல்லை.
ஜப்தி கெடுபிடி காரணமாக இப்பிரச்சினையில் 9 பேர் தற்கொலை செய்துள்ளனர். ஜெயலலிதா ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுகிற வகையில் கூட்டுறவு வீட்டுவசதி சங்க கடன் பெற்ற அனைவர் மீதும் எடுக்கப்பட்டு வரும் ஜப்தி, ஏல நடவடிக்கைகளை முழுமையாக கைவிட்டு, கடன் தொகை முழுவதையும் ரத்து செய்து அவர்களுக்கு நிவாரணம் வழங்கி ஏழை எளிய மக்ளை வாழ வைக்க முயல வேண்டும். மக்கள் முதல்வர் என்று கூறிக்கொள்ளும் ஜெயலலிதா இதை செய்வாரா? இவ்வாறு இளங்கோவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications