44 ஆண்டுகால பயணத்தில் 2-வது முறையாக முடங்கி மீண்டு எழுந்த இரட்டை இலை சின்னம்!
7 முறை அதிமுகவை அரியாசனத்தில் அமர வைத்த இரட்டை இலை சின்னம் 2-வது முறையாக முடங்கி மீண்டும் உயிர்ப்போடு எழுந்திருக்கிறது.
Recommended Video

சென்னை: தமிழக அரசியலில் கை சின்னம், உதயசூரியனைப் போல நிலைத்து நிற்கும் இரட்டை இலை சின்னத்துக்கு வயது 44. கடந்த 8 மாதங்களாக முடங்கிக் கிடந்த இரட்டை இலை சின்னம் இப்போது முதல்வர் எடப்பாடியார் அணிக்கே என தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து அதை மீண்டும் உயிர்ப்பிக்க வைத்திருக்கிறது.
1972-ம் ஆண்டு எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய நிலையில் திண்டுக்கல் லோக்சபா இடைத் தேர்தல் 1973-ம் ஆண்டு வருகிறது. அப்போது மதுரை மாவட்டத்தில் இருந்தது திண்டுக்கல்.
அதிமுகவுக்கான சின்னம் கேட்டு விண்ணப்பிக்கிறார் வேட்பாளர் மாயத்தேவர். மொத்தம் 16 சின்னங்கள் மாயத்தேவரிடம் காண்பிக்கப்படுகிறது. அதில் இரட்டை இலை சின்னத்தைத் தேர்வு செய்து எம்ஜிஆரிடம் கொடுக்கிறார் மாயத்தேவர். அத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் மாயத்தேவர் அமோக வெற்றி பெற்று திமுகவை அதிர வைத்தார்.

மும்முறை ஆட்சி
இதனைத் தொடர்ந்து 1977, 1980, 1984 சட்டசபை பொதுத்தேர்தல்களில் இரட்டை இலை சின்னம் அதிமுகவை அரியாசனத்தில் தொடர்ந்து அமர வைத்தது. இரட்டை இலை சின்னம் மூலமாக எம்ஜிஆர் 3 முறை ஆட்சியைப் பிடித்தார்.

முடக்கிய கோஷ்டி பூசல்
எம்ஜிஆர் உயிருடன் இருந்த போது எஸ்டிஎஸ் போன்றவர்கள் கலகக் குரல் எழுப்பினார்கள். ஆனால் அதிமுகவும் இரட்டை இலை சின்னமும் முடங்கிப் போகவில்லை. எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் அதிமுக ஜானகி, ஜெயலலிதா அணிகளாக உடைய இரு அணிகளுமே இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரின.

மீண்டும் இணைப்பு
இதனால் 1988-ம் ஆண்டு இரட்டை இலை சின்னம் முதல் முறையாக முடக்கப்பட்டது. 1989 தேர்தலில் அதிமுக அணிகள் இரட்டைப் புறா, சேவல் சின்னங்களில் போட்டியிட்டன. இத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவின் இரு அணிகளும் ஜெயலலிதா தலைமையில் இணைய மீண்டும் இரட்டை இலை சின்னம் அதிமுக வசமானது. 1991, 2001, 2011, 2016 ஆகிய தேர்தல்களில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது.

மீண்டும் உரிமை கோரல்
தமிழகத்தில் அதிமுக மொத்தம் 7 முறை ஆட்சி அமைக்க அடித்தூணாக இருந்தது இரட்டை இலை சின்னம். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் மீண்டும் அதிமுக சிதைந்து போனது. ஆர்கே நகர் தொகுதி தேர்தலில் ஓபிஎஸ் அணியும் சசிகலா அணியும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோர அது முடக்கப்பட்டது.

விசாரணைகள் நிறைவு
இதன்பின்னர் எடப்பாடி தலைமையிலான அணி உதயமாகி சசிகலா கோஷ்டி வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து ஓபிஎஸ்-எடப்பாடி அணி இணைந்து இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரினர். இன்னொரு பக்கம் சசிகலா அணியும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரினர்.

இரட்டை இலை எடப்பாடியாருக்கே
இன்று தேர்தல் ஆணையம், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்கிற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. முதல்வர் எடப்பாடியார் தலைமையிலான அணிக்கே இரட்டை இலை சின்னம் என தீர்ப்பளித்தது தேர்தல் ஆணையம். தமது 44 ஆண்டுகால பயணத்தில் 2-வது முறையாக முடங்கி மீண்டும் உயிர்ப்புடன் எழுந்து நிற்கிறது இரட்டை இலை சின்னம்.












Click it and Unblock the Notifications