தமிழகமே எதிர்பார்க்கும் ஆர்கே நகர் தொகுதிக்கு மே மாதம் இடைத்தேர்தல்?
தமிழகமே எதிர்பார்த்திருக்கும் ஆர்கே நகர் தொகுதிக்கு மே மாதம் இடைத்தேர்தல் நடைபெறக் கூடும் என்கின்றன தேர்தல் ஆணைய வட்டாரங்கள்.
சென்னை: ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கு மே மாதம் இடைத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு முதல்வரானார் ஜெயலலிதா. உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் டிசம்பர் 5-ந் தேதி ஜெயலலிதா காலமானார்.

ஜூன் 5-க்குள் தேர்தல்
இதைத் தொடர்ந்து ஆர்.கே. நகர் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இத்தொகுதிக்கு ஜூன் 5-ந் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.

மே மாதம் தேர்தல்?
இந்த நிலையில் வரும் மே மாதம் ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறக் கூடும் என்கின்றன தேர்தல் ஆணைய வட்டாரங்கள். இத்தேர்தலில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா போட்டியிட வேண்டும் என ஆர்கே நகர் அதிமுகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

சசிக்கு அக்னி பரீட்சை
அதிமுக தரப்பில் எம்ஜிஆர் உறவினர்களில் ஒருவரையோ அல்லது டிடிவி தினகரனையோ நிறுத்தலாம் என ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம். ஜெயலலிதா 2 முறை வென்ற தொகுதி என்பதால் எப்படியும் வெல்ல வேண்டிய நெருக்கடியில் அதிமுக இருக்கிறது. குறிப்பாக அதிமுக பொதுச்செயலராகிவிட்ட சசிகலாவுக்கு இது அக்னி பரீட்சைதான்.

திமுக வியூகம்
அதேநேரத்தில் திமுகவோ பலவீனமாக இருக்கும் அதிமுகவை எளிதாக வெல்ல முடியும் என கணக்குப் போட்டு காத்திருக்கிறது. ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பில் கட்சிகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகமே காத்திருக்கிறது!












Click it and Unblock the Notifications