ஜெயலலிதா படம் ஒட்டியிருந்த ஹெல்மெட், குக்கர்கள் பறிமுதல்: பறக்கும் படை அதிரடி
திண்டிவனம்: திண்டிவனம் அருகே ஓமந்தூரில் சவுக்கு தோப்பில் பதுக்கி வைத்திருந்த ஹெல்மெட் மற்றும் குக்கர்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திண்டிவனம் அருகே ஓமந்தூரில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியின் பின் பகுதியில் உள்ள சவுக்கு தோப்பில் தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக ஹெல்மெட், குக்கர்கள் போன்ற பரிசு பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், பறக்கும் படை அதிகாரி யுவராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு ஹெல்மெட், குக்கர் ஆகியன ஆங்காங்கே சிதறி கிடந்தன. அவை அனைத்திலும் ஜெயலலிதாவின் படம் ஒட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து அங்குகிடந்த 189 ஹெல்மெட், 21 குக்கர் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து திண்டிவனத்தில் உள்ள கருவூலத்தில் வைத்தனர்.
தேர்தலின் போது வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதற்காக இவை குவித்து வைக்கப்பட்டு இருக்கலாம் என்றும், அதிகாரிகள் வருவதை அறிந்து அங்கிருந்தவர்கள் பொருட்களை போட்டுவிட்டு தப்பி ஓடி இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் தொடர்புடையவர்கள் யார்? யார்? என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.