மதுரையில் குடோனில் பதுக்கி வைத்திருந்த விலையில்லா கிரைண்டர்கள் பறிமுதல்
மதுரை: மதுரை சோலையழகுபுரத்தில் தனியாருக்குச் சொந்தமான குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 408 விலையில்லா கிரைண்டர்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர்.
மதுரை மேற்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சோலையழகுபுரம் 1-ஆவது தெருவில் உள்ள ஒரு குடோனில் அரசின் விலையில்லா கிரைண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் அலுவலர்களுக்குத் தகவல் கிடைத்தது. பறக்கும்படை தனி வட்டாட்சியர் மகேஸ்வரி தலைமையில் அங்கு சென்ற பறக்கும்படை குழுவினர் குடோனை சோதனையிட்டனர்.
அரசின் சிறப்புத் திட்டத்தின்கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா கிரைண்டர்கள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. அட்டைப் பெட்டியுடன் 380 கிரைண்டர்களும், அட்டைப் பெட்டி இல்லாமல் 28 கிரைண்டர்கள் இருப்பது கண்டறிப்பட்டது. அதையடுத்து அந்த குடோனை தேர்தல் அலுவலர்கள் பூட்டி சீல் வைத்தனர்.
பின்னர் தொகுதியின் தேர்தல் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன் அறிவுரைப்படி தேர்தல் பறக்கும்படை அலுவலர்கள் இதுகுறித்து ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதன் பேரில் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கிரைண்டர்களை பறிமுதல் செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.