19 வயது கல்லூரி மாணவரிடம் ரூ. 52 லட்சம் 'கேஷ்'... பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரிகள்!
சென்னை: சென்னையிலிருந்து ராமநாதபுரத்திற்குச் சென்ற ஆம்னி பஸ்சில் பயணித்த கல்லூரி மாணவரிடம் ரூ. 52 லட்ச்ம் பணம் இருந்தது தேர்தல் கால வாகன சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டு அது பறிமுதல் செய்யப்பட்டது.
தேர்தல் காலம் என்பதால் தமிழகம் முழுவதும் வாகன சோதனை முடுக்கி விடப்பட்டுள்ளது. அனுமதி அளிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் பணம் எடுத்துச் சென்றார் போலீஸார் பறிமுதல் செய்து விடுகின்றனர். மேலும் உரிய ஆவணங்களைக் காட்டாவிட்டால் இந்தப் பணத்தைத் திரும்பப் பெறவும் முடியாது.
இந்த நிலையில், நேற்று மணலியில் இருந்து ராமநாதபுரத்துக்கு ஆம்னி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு 11.30 மணியளவில் இந்த பஸ் மீனம்பாக்கம் ஜி.எஸ்.டி. ரோட்டில் சென்றபோது, தேர்தல் பறக்கும் படை அதிகாரி செல்வின், சப்- இன்ஸ்பெக்டர் சத்தியன், போலீஸ்காரர்கள் பெரியசாமி, செந்தில் ஆகியோர் அந்த பஸ்சை நிறுத்தினார்கள். பஸ்சில் இருந்த பைகள், பெட்டிகள் ஆகியவற்றை சோதனை செய்தார்கள்.
அப்போது ஒரு வாலிபரின் சீட்டின் கீழே அட்டைப்பெட்டி ஒன்று இருந்தது. அதை சோதித்தபோது அதன் உள்ளே ஆயிரம், 500 ரூபாய் கட்டுக்களாக ரூ. 52 லட்சத்து 30 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்க பணம் மற்றும் 90 செல்போன்கள் இருந்தன.
அந்த அட்டைப்பெட்டியை முகமது சஸ் ரீத் (19) என்பவர் கொண்டு சென்றது. தெரிய வந்தது. சென்னை ஏழு கிணறைச் சேர்ந்தவர். சஸ் ரீத்துடன் அவரது நண்பர் அக்னேஷ் (17) என்பவரும் இதே பஸ்சில் சென்றுள்ளார்.
பணம் நிரம்பிய அட்டைப் பெட்டியுடன் சிக்கிய முகமது சஸ்ரீத், அக்னேஷ் இருவரும் கல்லூரி மாணவர்கள். சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்கள். பணத்துக்கான ஆவணம் எதுவும் இல்லை. எனவே பணம் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பணமும் அதை கொண்டு சென்ற மாணவரும் மீனம்பாக்கம் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.
இதுகுறித்து சஸ் ரீத்திடம் போலீஸார் விசாரித்தபோது எனக்கு என்ன என்றே தெரியாது. இந்தப் பெட்டியை எனது தந்தைதான் கொடுத்தார். பாட்டி வீட்டில் கொடுக்குமாறு கூறியிருந்தார் என்றார்.
இதையடுத்து சஸ் ரீத்தின் தந்தையைப் பிடித்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.